எட்டி உதைத்தவரை கூட்டமாக வந்து பழிவாங்கிய நாய்!!
சீனாவில் உள்ள சாங்க்கிங் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் காரில் வெளியே சென்று விட்டு தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது தனது காரை நிறுத்தும் செய்யும் பகுதியில் நாய் ஒன்று படுத்திருப்பதை கண்டார்.
இதனால் கடுப்பான அவர், காரிலிருந்து இறங்கி நாயை எட்டி உதைத்தார். அடி வாங்கிய நாய் ஓட்டம் பிடித்தது. பின்னர் காரை அங்கு நிறுத்தி விட்டு அந்த நபர் வீட்டிற்குள் சென்று விட்டார்.
ஆனால் அதன் பிறகு தான் தொடங்கியது நாய்களின் மிரட்டும் பழிவாங்கும் நடவடிக்கை. எட்டி உதைத்தவுடன் வேகமாக ஓடிய அந்த நாய், தனது சக நண்பர்களை, தான் உதை வாங்கிய இடத்திற்கு கூட்டி வந்தது.
தனது சகாவை தாக்கியவரை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று 4-க்கும் மேற்பட்ட நாய்கள் கார் பார்க்கிங் பகுதிக்கு விரைந்து வந்தன.
ஆனால் கார் மட்டும் தான் இருந்தது. எட்டி உதைத்த நபரை காணோம். எனினும் ஆத்திரம் குறையாத நாய்கள் அனைத்தும் காரை ரவுண்டு கட்டி துவம்சம் செய்தன. காரின் வைப்பரையும் வாயால் கடித்து துப்பின.
இக்காட்சிகளை படம் பிடித்த பக்கத்து வீட்டுக்காரர் அக்காட்சிகளை காரை ஓட்டி வந்தவரிடம் காண்பிக்க அவர் அப்படியே ஆடிப்போனார்.
காரில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்ட அவர், நல்லவேளை நாம் தப்பித்தோம் என எண்ணியது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் நாயாக இருந்தாலும் நாகரிகமாக பழகு என்று கூறுகிறார்களோ…
Average Rating