காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவி முருகன் கோவிலில் திருமணம் செய்து போலீசில் தஞ்சம்!!
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள கண்டிக்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன் சசிகுமார்(வயது 22). குமாரபாளையம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3–ம் ஆண்டு படித்து வருகிறார்
அந்தியூர் பகுதியை சேர்ந்த வீரக்குமார். இவரது மகள் சுகன்யா(20). இவர் சசிகுமார் பயிலும் அதே கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் 3–ம் ஆண்டு படித்து வருகிறார்.
ஒரே கல்லூரியில் படித்த சசிகுமாருக்கும், சுகன்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. கடந்த 2½ ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் பெற்றோர் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து சுகன்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இருவரும் திருச்செங்கோடு முருகன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து அரச்சலூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது. இதுபற்றி தகவல் அறிந்த காதலர்களின் பெற்றோர் போலீஸ் நிலையம் திரண்டு வந்தனர்.
அப்போது சுகன்யாவின் பெற்றோர் அவரிடம் காதலனை உதறிவிட்டு தங்களுடன் வந்துவிடு என மன்றாடினர். ஆனால் மாணவி காதல் கணவருடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து போலீசார் சசிகுமாருடன் மாணவியை அனுப்பி வைத்தனர். சுகன்யாவின் பெற்றோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுபற்றி அரச்சலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating