சுசீந்திரம் அருகே பாலீஷ் செய்வதாக கூறி பெண்களிடம் நகை மோசடி: பீகார் வாலிபர் கைது!!
சுசீந்திரத்தை அடுத்த பள்ளம் அன்னை நகர் சுனாமி காலனியை சேர்ந்தவர் வர்க்கீஸ். இவரது மனைவி திலகா (வயது 33). நேற்று மதியம் இவரது வீட்டுக்கு வடமாநில வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை குறைந்த விலையில் பாலீஸ் செய்து புது நகை போல மாற்றி தருவதாக ஆசை காட்டினார். அவரது பேச்சில் மயங்கிய திலகா தன்னிடம் இருந்த வெள்ளி கொலுசை கொடுத்தார்.
உடனே அந்த வாலிபர் கொலுசு மீது ஆசிட் போன்ற திரவத்தை ஊற்றி சுத்தம் செய்தார். சிறிது நேரத்தில் அந்த கொலுசு பளபளத்தது. இதை ஆச்சர்யத்துடன் பார்த்த திலகாவிடம் ‘உங்கள் கழுத்தில் கிடக்கும் நகையும் அழுக்காக உள்ளதே, அதை கொடுங்கள் சிறிது நேரத்தில் பாலீஷ் செய்து தருகிறேன், இரண்டு நகைகளுக்கும் சேர்ந்து ரூ.150 கொடுத்தால் போதும்‘ என்றார்.
உடனே திலகா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை கழற்றி கொடுத்தார். அந்த நகை மீது திரவத்தை ஊற்றவும் நகை கரையத்தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த திலகா இது பற்றி வாலிபரிடம் கேட்க முதலில் அப்படித்தான் தெரியும், சிறிது நேரம் கழித்து மஞ்சள் பொடி தடவி பின் காய வைத்து பாருங்கள், உங்கள் நகை புது நகை போல ஜொலிக்கும் என கூறிய அவர் பாலீஷ் செய்ததற்கான கூலியை வாங்கிக்கொண்டு சென்று விட்டார்.
வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த திலகா பக்கத்து வீட்டு பெண்களிடம் நகையை காட்டி நடந்த சம்பவங்களை கூறினார். பின்னர் நகையின் எடையை பரிசோதித்த போது 7 பவுன் நகை 5 பவுனாக குறைந்திருந்தது தெரிய வந்தது.
அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திலகா கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்கள் வந்து விசாரித்த போது வடமாநில வாலிபர் திலகாவை போல அப்பகுதியை சேர்ந்த பல பெண்களிடம் நகை மோசடி செய்தது தெரியவந்தது.
உடனே அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு மோசடி செய்த வாலிபரை தேடினர். அப்போது அவர் பள்ளம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். மக்கள் திரண்டு வருவதை கண்ட அவர் தப்பி ஒட முயன்றார். பொதுமக்கள் அவரை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து சுசீந்திரம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர் பீகார் மாநிலம் அனந்தபுர் சவுக் பகுதியை சேர்ந்த சத்திய பிரகாஷ் (வயது 31) என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக திலகா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்திய பிரகாசை கைது செய்தனர்.
இவர் பாலீஷ் செய்வது போல நடித்து திருவட்டார், மார்த்தாண்டம், கருங்கல் பகுதிகளில் ஏராளமான பெண்களிடம் நகை மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இவருடன் மேலும் சிலர் குமரி மாவட்ட பெண்களை ஏமாற்றி மோசடி செய்யும் தகவலும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating