அதிகாரி தற்கொலை வழக்கு: வேளாண்மை தலைமை பொறியாளரும் கைது!!
நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் சென்னையைச் சேர்ந்த வேளாண் துறை தலைமை பொறியாளர் செந்திலும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இவர் அதிகாரி முத்து குமாரசாமியை அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசி இருப்பது அம்பலமாகி உள்ளது.
இது தொடர்பாக முத்து குமாரசாமியின் மூத்த மகன் விஜய்யை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:–
நானும் எனது தம்பி சேதுராம் வினோத்தும் சென்னையில் தங்கி இருந்து பணிபுரிந்து வந்தோம். எனது தந்தை முத்துக்குமாரசாமியும் தாய் சரஸ்வதியும் நெல்லையில் வசித்து வந்தனர். எனது தந்தை தற்கொலை செய்வதற்கு 10 நாள் முன்பு வரை தலைமை பொறியாளர் செந்தில் அடிக்கடி அவருடன் போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
எனது தந்தை மரணத்துக்கு பிறகு தாய் சரஸ்வதிதான் இதை தெரிவித்தார். உள்ளூரைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் பலரும் எனது தந்தையுடன் அடிக்கடி பேசி உள்ளனர். அவர்களின் நெருக்கடி காரணமாக எனது தந்தை உயிரை மாய்த்து உள்ளார். எனவே இதற்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரி முத்து குமாரசாமி தற்கொலை செய்து 40 நாட்களுக்கு பிறகு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு இருப்பதால் இந்த வழக்கில் மேலும் பலர் சிக்க வாய்ப்பு இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
தலைமை என்ஜினீயர் செந்திலை போல முத்து குமாரசாமியை மிரட்டியவர்கள் யார்–யார்? என்பது சி.பி.சி.ஐ.டி. போலீசார் பட்டியல் சேகரித்து வைத்துள்ளனர். அதில் வேளாண் துறையில் பணியாற்றும் மேலும் சில முக்கிய பிரமுகர்களும், அரசியல் பிரமுகர்களும் இடம் பெற்று இருப்பதாக தெரிகிறது. அடுத் தடுத்து இவர்களும் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
தற்கொலை செய்து கொண்ட வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியின் சொந்த ஊர் செங்கோட்டை அருகே உள்ள இலஞ்சி.
நெல்லையில் உள்ள வேளாண் அலுவலகத்தில் முத்துக்குமாரசாமி பணியாற்றியதால் பாளையங் கோட்டை என்.ஜி.ஒ. காலனி திருமால் நகரில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
முத்துக்குமாரசாமி மரணத்துக்கு பிறகு அவரது மனைவி சரஸ்வதி, அவரது மகன்கள் விஜய், சேதுராம் ஆகியோர் தூத்துக்குடியில் உள்ள தங்களது தாய் மாமா வீட்டில் தற்போது வசித்து வருகிறார்கள்.
தந்தை இறந்து விட்ட நிலையில் தாயை மட்டும் தனியாக தங்க வைக்க மனமில்லாமல் மகன்கள் இருவரும் அவரை சென்னைக்கு அழைத்து வந்து தங்களுடன் குடியமர்த்த முடிவு செய்து உள்ளனர். விஜய், சேதுராம் இருவரும் சென்னையில் பணியாற்றி வருவதால் இங்கு வாடகைக்கு வீடு பார்த்து வருகிறார்கள்.
Average Rating