சொத்து பிரச்சினையில் கணவர் முதல் மனைவியின் மகளை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!!
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் காமராஜ் புரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இவர்களுக்கு பவித்ரா (10) என்ற மகளும் அரி கிருஷ்ணன் என்ற மகனும் இருந்தனர்.
இந்த நிலையில் மனைவி இறந்து விட்டதால் பழனிச்சாமி, சித்ராதேவி (25) என்ற பெண்ணை 2–வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
இந்த நிலையில் கணவரின் சொத்துகள் அனைத்தும் முதல் மனைவியின் குழந்தைகளுக்கே போய் சேர்ந்து விடும் என்று சித்ரா தேவி பயந்து வந்தார். இதுதொடர்பாக பழனிச்சாமிக்கும், சித்ரா தேவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் முதல் மனைவியின் குழந்தைகளை கொன்று விட்டால் சொத்துக்கள் எல்லாம், தனது மகனுக்கே கிடைத்து விடும் என்று நினைத்தார். அதன்படி அந்த 2 குழந்தைகளையும் கொல்ல அவர் முடிவு செய்தார்.
கடந்த 13.10–2013–அன்று கணவரின் முதல் மனைவியின் குழந்தைகளான பவித்ரா, அரிகிருஷ்ணன் ஆகியோரை அழைத்து கொண்டு சித்ரா தேவி சென்றார்.
பின்னர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் இந்த 2 குழந்தைகளையும் தள்ளி விட்டார். இதில் சிறுமி பவித்ரா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். ஆனால் அரிகிருஷ்ணனை அந்த வழியாக சென்ற சிலர் காப்பாற்றி விட்டனர்.
இந்த சம்பவம் பற்றி சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியான அரிகிருஷ்ணன் போலீசில் வாக்குமூலம் கொடுத்தான்.
அதில் தனது சித்தி சித்ராதேவி தான், எங்களை கிணற்றில் தள்ளி விட்டார் என்று தெரிவித்திருந்தான்.
இந்த வழக்கின் விசாரணை ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
இன்று வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு, சிறுமி பவித்ராவை கொன்ற குற்றத்துக்காக சித்ராதேவிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் சிறுவன் அரிகிருஷ்ணனை கொல்ல முயற்சித்த குற்றத்துக்காக 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இதில் மொத்த அபராத தொகையான ரூ.60 ஆயிரத்தை சிறுவன் அரிகிருஷ்ணனிடம் சித்ரா தேவி வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார்.
Average Rating