வாடிப்பட்டி அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் ரூ.44 லட்சம் கொள்ளை!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள செட்டூர் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது66). சோழவந்தான் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் கேஷியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
3 மாதங்களுக்கு முன்பு இவரது குடும்பத்துக்கு சொந்தமான 6 ஏக்கர் தென்னந்தோப்பை ரூ.1½ கோடிக்கு விற்றார். அண்ணன்–தம்பிக்கு பங்கு பிரித்ததில் கிருஷ்ணனுக்கு ரூ.66 லட்சம் கிடைத்தது.
இதில் ரூ.12 லட்சத்தில் 2½ ஏக்கர் நிலத்தை வாங்கினார். மீதி தொகையான ரூ.44 லட்சத்தை வீட்டின் உள்அறையில் வைத்திருந்தார்.
நேற்று காலை கிருஷ்ணன் மதுரைக்கு சென்று விட்டு இரவு 11 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது பூட்டப்பட்டு இருந்த உள்அறையின் கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ.44 லட்சத்தை மர்ம மனிதர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்–இன்ஸ்பெக்டர்கள் அர்சுணன், முருகானந்தம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
சமயநல்லூர் டி.எஸ்.பி. (பொறுப்பு) குமரவேலும் விசாரணை செய்தார். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர்.
ரூ.44 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating