டெல்லியில் வாடகைக் காருக்குள் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு: டிரைவர் கைது!!
டெல்லியில் வாடகைக் காரில் பயணம் செய்த பெண்ணை கற்பழித்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி மதுவிகார் குடியிருப்பில் வசித்து வரும் 32 வயது பெண், நேற்று இரவு 10.30 மணியளவில் வேலை முடிந்ததும் துவாரகா மோர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு ரமேஷ் குமார் என்பவரின் வாடகைக் காரில் புறப்பட்டார். கார் டிரைவர் சற்று தொலைவு சென்றதும் வேறு ஒரு பயணியை ஏற்றியுள்ளார். அவரை ராஜபூரியில் இறக்கிவிட்ட பின்னர், காருக்கு எரிவாயு நிரப்ப வேண்டும் என்று ஒதுக்குப்புறமான இடத்திற்கு காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
ஆள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதி செய்த டிரைவர், காருக்குள் தனியாக இருந்த பெண்ணை கற்பழித்துள்ளார். காருக்குள் மாட்டிக்கொண்டு கூக்குரலிட்ட அந்த பெண்ணின் அழுகைச் சத்தம் கேட்டு, அப்பகுதி வழியாக பைக்கில் சென்ற ஒருவர், காவல்துறை கட்டுப்பாட்டு அறை ரோந்து வாகனத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தனர். போலீசாரைப் பார்த்த டிரைவர், அந்தப் பெண்ணுடன் காரை ஸ்டார்ட் செய்து வேகமாக சென்றுள்ளார். போலீசாரும் விடாமல் துரத்திச் சென்று அரை கிலோ மீட்டர் தொலைவில் காரை மடக்கினர். தப்பி ஓட முயன்ற டிரைவரை கைது செய்தனர்.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் இதேபோன்று உபேர் டாக்சியில் பயணம் செய்த பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Average Rating