திருட்டு வழக்கில் சிறையில் அடைப்பு: திருமணத்துக்காக கைதிக்கு ஒரு நாள் ஜாமீன் கோர்ட்டு உத்தரவு!!
பொள்ளாச்சி, மார்க்கெட் அருகே உள்ள பழனியப்பாகவுண்டர் வீதியை சேர்ந்தவர் அபு என்ற இப்ராகீம் (வயது27). இவரை திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ‘தான் மீண்டும் திருட்டு குற்றங்களில் ஈடுபட மாட்டேன்’ என்று பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் உறுதிமொழி பத்திரம் வழங்கி இருந்தார். இதைத்தொடர்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் மீண்டும் அபு திருட்டு குற்றங்களில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர் எளிதில் வெளிவர முடியாத சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் அபு என்ற இப்ராகீமுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை அவர் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. திருமணம் வருகிற 29–ந்தேதி நடைபெற உள்ளது.
அபு என்ற இப்ராகீம், தனது திருமணத்துக்காக தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுமீது விசாரணை நடத்திய மாவட்ட தலைமை நீதிபதி சேஷஷாயி, திருமணத்துக்காக அபு என்ற இப்ராகீமை ஒரு நாள் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இதன்படி 28–ந்தேதி மாலை 6 மணிக்கு சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பொள்ளாச்சிக்கு அழைத்து செல்லப்படும் அவரை, திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் 29–ந்தேதி மாலை 6 மணிக்கு மீண்டும் கோவை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Average Rating