சீனாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்காவின் உயர் விருதைப் பெறுகிறார் தலாய் லாமா
சீனாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு அமெரிக்காவில் மிகவும் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புதன்கிழமை மாலையே இவ்விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறவிருந்ததால் இச்செய்தி எழுதப்படும் வரை இந்நிகழ்வு தொடர்பான தகவல்கள் வெளிவரவில்லை. இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷும் பங்குபற்றவுள்ள அதேவேளை, நாடு கடத்தப்பட்ட தலைவரொருவருடன் அமெரிக்க ஜனாதிபதியொருவர் இணைந்து பொதுநிகழ்வொன்றில் கலந்துகொள்வது இதுவே முதல் தடவையாகும். இதேவேளை, தலாய் லாமாவை கௌரவிப்பது அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான உறவை பாதிக்குமென சீனா எச்சரித்துள்ளதுள்ளதுடன் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பத்திரிகையில் அமெரிக்காவின் தவறான நகர்வு என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கமொன்றையும் தீட்டியுள்ளது. இந்நிலையில், வெள்ளை மாளிகை வளாகத்தில் தலாய் லாமாவை புஷ் சந்தித்தார். இச்சந்திப்பு மூடிய கதவுகளுக்குள் இடம்பெற்றுள்ளது. சீனாவின் கவலையை புஷ் புரிந்துகொண்டுள்ளதாக தெரிவித்த வெள்ளை மாளிகைப் பேச்சாளரொருவர், அமைதியை விரும்பும் ஆன்மீகத் தலைவர் என்ற ரீதியிலேயே தலாய் லாமா கௌரவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.