மணப்பாறையில் கோவில் திருவிழாவில் வாலிபர் படுகொலை: மறியல்–போலீசாருடன் மோதல்!!
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் சித்திரை மாதம் சித்திரை பெருந்திருவிழா நடைபெறும். இந்த திருவிழா சித்திரை முதல் நாளில் குத்து விளக்கு பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பூச்சொரிதல், காப்பு கட்டுதல், பால்குடம், வேடபரி, பின்னர் காப்பு கலைதலுடன் திருவிழா நிறைவடையும்.
இந்த திருவிழா ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும். இந்நிலையில் நேற்று அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூ போட்டனர். இதுமட்டு மின்றி மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட ரதங்கள் செல்ல அதனைத் தொடர்ந்து அந்தந்த பகுதி மக்கள் பூந்தட்டு ஏந்தி வந்தனர். இந்த ரதங்களுக்கு முன் அந்தந்த பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஆட்டம் ஆடி, பாட்டுப்பாடி வந்தனர்.
இதே போல் நேற்று இரவு மாரியம்மன் கோவில் திருமண மண்டபம் எதிரே ஒரு ரதம் சென்று கொண்டிருந்தது. அந்த ரதத்திற்கு முன் ஆடிவந்த மணப்பாறை எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 20, டிப்ளமோ முடித்து உள்ளார்), விக்னேஷ் (23), ஹரிகிருஷ்ணன் (26) ஆகியோரை சில இளைஞர்கள் சேர்ந்து உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கினர்.
மேலும் அந்த வழியாக வந்த வடக்கிப்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன் (24) என்பரையும், பொதுமக்கள் சிலரையும் மர்ம இளைஞர்கள் விரட்டி விரட்டி தாக்கினர். இதனால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதுடன் சிலர் காயமடைந்த நிலையில் தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த முத்துக்குமார் உள்பட 4 பேரையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு முத்துக்குமாரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே முத்துக்குமார் இறந்து விட்டதாக கூறினார். முத்துக்குமாரின் தலையில் பலத்த காயம் அடைந்ததால் அவர் இறந்து விட்டது தெரியவந்தது. மேலும் படுகாயமடைந்த பழனியப்பன் உள்பட 3 பேர் மணப்பாறை அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சைக்குப்பின் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த முத்துக்குமார் மற்றும் காயமடைந்த 3 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் என பலரும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். மேலும் தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் கொலை செய்த வாலிபர்களை கைது செய்திட வலியுறுத்தியும் மணப்பாறை – விராலிமலை சாலையில் அரசு மருத்துவமனை எதிரில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பினர்.
மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும்–போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் மணப்பாறை பகுதியில் பல இடங்களில் 200–க் கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து 6 வாலிபர்களை பிடித்து கொலைக்கான காரணம் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மணப்பாறையில் திருவிழாவின் போது வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Average Rating