தெலுங்கு `சூப்பர் ஸ்டார்’ நடிகர் சிரஞ்சீவி மகளுக்கு திடீர் திருமணம்: வீட்டை விட்டு வெளியேறி, காதலனை கரம் பிடித்தார்

Read Time:8 Minute, 41 Second

indsiranseevidaugther.jpgதெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் மகள் திடீர் திருமணம் செய்துகொண்டார். அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறி, ஆரிய சமாஜத்தில் காதலனை அவர் மணந்துகொண்டார். தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி, 200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர். சிரஞ்சீவியின் 2-வது மகள் பெயர், ஸ்ரீஜா (வயது 19). ஐதராபாத்தில், `சி.ஏ.'(சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்) 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ஐதராபாத்தை சேர்ந்த வக்கீல் காடி வெங்கடமூர்த்தி என்பவரின் மகன், ஷிரிஷ் பரத்வாஜ் (வயது 22). என்ஜினீயரிங் (`பி.டெக்.’) பட்டம் பெற்றவர். ஸ்ரீஜாவும், பரத்வாஜ×ம் காதலர்கள். நேற்று காலை, அவர்கள் இருவரும் திடீர் திருமணம் செய்து கொண்டனர். ஐதராபாத், போயம்பள்ளியில் உள்ள ஆரிய சமாஜத்தில் அவர்களுடைய திருமணம் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது. அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவது பற்றி, கடந்த 12-ந் தேதி ஆரிய சமாஜத்தில் தகவல் தெரிவித்து உள்ளனர். ஆரிய சமாஜத்தினர் திருமண தேதியை நிச்சயித்து காதலர்களின் திருமணத்தை நடத்தி வைத்து சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

வீட்டை விட்டு வெளியேறி

ஸ்ரீஜா, நேற்று அதிகாலையிலேயே யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, காதலன் பரத்வாஜின் நண்பர்கள் சிலரின் துணையோடு ஆரிய சமாஜத்துக்கு சென்று காதலனை மணந்துகொண்டார். ஆரிய சமாஜத்தில் திருமணம் நடைபெற வேண்டும் என்றால், திருமண பத்திரிகை அச்சிட்டு, முன்னதாகவே வழங்க வேண்டும்.

அதன்படி,மணமகன் பரத்வாஜின் தந்தை காடி வெங்கடமூர்த்தி, மணமகள் ஸ்ரீஜாவின் தந்தை சிரஞ்சீவி ஆகியோர் பெயரில் திருமண பத்திரிகை தெலுங்கில் அச்சிட்டு, சமாஜத்தில் வழங்கப்பட்டு உள்ளது. பரத்வாஜின் நண்பர்களே வழங்கியுள்ள இந்த பத்திரிகையில், நடிகர் சிரஞ்சீவி என்று குறிப்பிடப்படவில்லை.

டி.வி.யில் ஒளிபரப்பு

திருமணத்துக்கு முன்னதாக, மணமகன் பரத்வாஜின் நண்பர்கள், தெலுங்கு தனியார் டி.வி.யான `டி.வி. 9′ நிறுவனத்துக்கு தொடர்பு கொண்டு, நடிகர் சிரஞ்சீவியின் மகள் திருமணம் நடப்பதை பற்றிய தகவலை தெரிவித்து உள்ளனர்.

உடனடியாக அந்த டி.வி. நிறுவனம், திருமண நிகழ்ச்சியை நேரடியாக படம் பிடித்து ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சி, ஆந்திர மாநிலம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் இருவரும் காரில் புறப்பட்டுச் சென்றனர்.

சிரஞ்சீவி எதிர்ப்பு

அவர்கள் எங்கு சென்றனர் என்று அறிவிக்கப்படவில்லை. முன்னதாக, மணமக்கள் இருவரிடமும் காரிலேயே டி.வி. நிருபர் பேட்டி கண்டு ஒளிபரப்பினார். காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் திருமணம் செய்துகொள்ள சிரஞ்சீவி வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால், வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்ததாக, ஸ்ரீஜா தெரிவித்தார்.

`வீட்டுச்சிறை’

பேட்டியின்போது, ஸ்ரீஜா மேலும் கூறியதாவது:- “கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகிறோம். நான் மேஜர் பெண். எனக்கு வயது 19. எங்கள் காதல் விவகாரம் தெரிந்ததும், எனது பெற்றோர் என்னை `வீட்டுச்சிறை’யில் வைத்தனர். கடந்த ஓராண்டாக என்னை கல்லூரிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை.

எனது பெற்றோரிடம் இருந்து எங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. போலீசாரும், பத்திரிகை மற்றும் ஊடகங்களும் (மீடியா) எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மாலையில் எனது பெற்றோரை சந்தித்து ஆசி பெற இருக்கிறோம்.” இவ்வாறு புதுமணப்பெண் ஸ்ரீஜா கூறினார்.

கலப்பு திருமணம்

புதுமாப்பிள்ளை பரத்வாஜ் கூறியதாவது:- “ஸ்ரீஜா குடும்பத்தினரின் அச்சுறுத்தலை மீறி நாங்கள் கலப்பு திருமணம் செய்துகொண்டோம். ஸ்ரீஜாவின் பெற்றோர் மிகவும் செல்வாக்கு உள்ளவர்கள் என்பதால், உடனடியாக எங்களுக்கும், எனது பெற்றோருக்கும் பாதுகாப்பு வேண்டும். நாங்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளும் வயதை எட்டிய மேஜர்கள்.” இவ்வாறு பரத்வாஜ் கூறினார்.

நடிகர் சிரஞ்சீவி என்று தெரியுமா?

திருமணத்தை நடத்திவைத்த ஆரிய சமாஜ புரோகிதரிடம் திருமண பத்திரிகையில் குறிப்பிட்டு இருந்த மணமகளின் தந்தை நடிகர் சிரஞ்சீவி என்று தெரியுமா? என்று கேட்டதற்கு தெரியாது என்று அவர் பதில் அளித்தார்.

நேற்று மாலையே பெற்றோரை சந்தித்து ஆசி பெறப்போவதாக ஸ்ரீஜா முதலில் கூறி இருந்தார். ஆனால், மாலையில் அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். “எனது பெற்றோருக்கு இன்னும் கோபம் தணிந்து இருக்காது என்பதால் பின்னர் அவர்களை சந்திக்க இருப்பதாக” ஸ்ரீஜா தெரிவித்தார்.

போலீஸ் பாதுகாப்பு

திருமணத்துக்குப்பின் மணமக்கள் இருவரும், ஐதராபாத் அம்பரப்பேட்டா என்ற இடத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் இருப்பதாக தகவல் வெளியானது. இரு வீட்டாரின் பெற்றோரும் அவர்களுடன் தொடர்பு கொள்ள முயன்றபோது, மணமக்களின் செல்போன் இணைப்பு `சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்ததால் தொடர்புகொள்ள முடியவில்லை.

இதற்கிடையில், எந்த நேரத்திலும் மணமக்கள் சிரஞ்சீவியின் வீட்டிற்கு வரலாம் என்று எதிர்பார்த்த பத்திரிகை மற்றும் டி.வி. நிருபர்கள், புகைப்படக்காரர்கள் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள சிரஞ்சீவியின் வீட்டின் முன்பு கூடி இருந்தனர். அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வீட்டுக்கு வரும் வழியில் உள்ள பெத்தம்மா கோவிலில் மணமக்கள் வழிபாடு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருந்ததால் அங்கும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நிருபர்கள் சிரஞ்சீவியை தொடர்புகொள்ள முயன்ற போது, இரவு 7 மணி அளவில் அவர் நிருபரை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, அவர் மணமக்களுடன் பேட்டி அளிக்கலாம் என்று எதிர்பார்த்து நிருபர்கள் ஆவலுடன் காத்து இருந்தனர். ஆனால், சிரஞ்சீவி பேட்டி எதுவும் கொடுக்கவில்லை.

indsiranseevidaugther.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சட்ட விரோத மதுக்குகை பொலிஸாரினால் முற்றுகை
Next post புத்திசாலியான இளைய மகனின் ரத்தத்தை மூத்த மகனுக்கு செலுத்த முயன்ற கொடூரம் : விபரீத செயலில் ஈடுபட்ட டாக்டர் தம்பதி கைது