வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக மனைவி புகார்: மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்–இன்ஸ்பெக்டர் கைது!!
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கூகுட்டப்பட்டி ஊராட்சி சரக்கப் பிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் முனியன். இவரது மகன் சுரேஷ்குமார் (34) இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஓமலூரை அடுத்த தொளசம்பட்டி பகுதியை சேர்ந்த லலிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி ஒரு மாத காலம் தனது மனைவியுடன் குடும்பம் நடத்திய சுரேஷ் குமார் மீண்டும் ஒரிசா மாநிலத்திற்கு வேலைக்காக சென்று விட்டார். இந்த நிலையில் லலிதா கர்ப்பம் ஆனார். இதில் இவர்களுக்கு கமலேஷ்குமார் என்ற ஆண் குழந்தை பிறந்தான்.
கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் லலிதா தனது குழந்தையுடன் தொளசம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகின்றார்.
வரதட்சணை கேட்டு தனது கணவர் சுரேஷ்குமார் மற்றும் அவரது தந்தை முனியன், தாய் சாந்தா ஆகியோர் கொடுமைப்படுத்துவதாக தீவட்டிப்பட்டி போலீசாரிடம் லலிதா புகார் கொடுத்தார்.
புகார் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து லலிதாவின் கணவரான சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாரை கைது செய்தனர். கைது செய்த அவரை ஓமலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து ஓமலூர் நீதிமன்ற நடுவர் ரெஹெனாபர்வீன் முன்பு ஆஜர்செய்தனர். வரதட்சணை கொடுமையில் கைது செய்யப்பட்ட சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமாரை ஓமலூர் கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் இதை தொடர்ந்து சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமாரை ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
வரதட்சணை கொடுமையில் சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டது இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating