`நடிகை கரீனா கபூரை காதலிப்பது உண்மை’: இந்தி நடிகர் சைப் அலிகான் பேட்டி
இந்தி நடிகை கரீனா கபூர் உடனான காதலை நடிகர் சைப் அலிகான் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி – நடிகை ஷர்மிளா தாகூர் தம்பதியின் மகனான சைப் அலிகான், கடந்த 1991-ம் ஆண்டு நடிகை அம்ரிதா சிங்கை திருமணம் செய்தார். இரண்டு குழந்தைகள் பெற்ற பின்னர் 2004-ம் ஆண்டு இவர்களது திருமண உறவு முறிவுக்கு வந்தது. இதையடுத்து, தன்னுடைய நீண்ட நாள் காதலியான ரோஸா கேதலினாவோடு சைப் அலிகான் உல்லாச வாழ்வு வாழ்ந்தார். இந்த காதலும் சில மாதங்களுக்கு முன் `திடீரென’ கருகிப்போனது.இதற்கிடையே, பிரபல கபூர் குடும்பத்து புதிய வாரிசான கரீனா கபூரும் தன்னுடைய காதல் கசந்த நிலையில் இருந்து வந்தார். பழம்பெரும் நடிகர் ராஜ்கபூரின் பேத்தியான அவர், நடிகர் சாகித் கபூரை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த ஜோடியின் முத்த காட்சிகள் அடங்கிய கிளு கிளுப்பான காட்சிகள் கூட, இரண்டு ஆண்டுகளுக்கு முன் எம்.எம்.எஸ்., மூலமாக செல்போன்களில் உலா வந்தன. ஆனால் இவர்கள் காதலில் சமீப காலமாக விரிசல் ஏற்பட்டது. சாகிப் கபூரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிய கரீனா கபூர், சைப் அலிகானை காதலித்தார். டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ஓட்டல்கள், பார் என இந்த புதிய ஜோடி சுற்றி வந்தன.
பகிரங்க அறிவிப்பு
இந்த நிலையில், மும்பையில் நேற்று முன்தினம் நடந்த பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஒன்றாக கைகோர்த்து வந்தனர். இதன் மூலமாக, இருவரும் காதலித்து வருவதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர். விழா முடிந்ததும் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சைப் அலி, “நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் தருணங்கள் எல்லாம் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எங்கள் உறவுக்கு பத்திரிகைகள் மிகுந்த முக்கியத்துவம் தருகின்றன” என்று தெரிவித்தார். அருகில் இருந்த கரீனா கபூர், சிரித்தபடியே ஆமோதித்தார்.
இதற்கிடையே கரீனா கபூரால் கைவிடப்பட்ட சாகித், தன்னுடைய அடுத்த பட வேலையில் மூழ்கியபடி, தன்னுடைய காதல் வேதனையை தணிக்க முயற்சி செய்து வருகிறார்.