காட்டுபன்றியை சுட்டபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து ஊராட்சி பெண் உறுப்பினர் சாவு!!
திருக்கோவிலூர் அருகே உள்ள சக்கிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி பார்வதி (வயது 55). எரவலம் ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினராக இருந்துவந்தார். இவருக்கு கிராம பகுதியில் கரும்பு தோட்டம் இருந்தது. நேற்று மாலை அவர் அங்கு சென்று தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு இருந்தார்.
இந்த நேரத்தில் 30 பேர் காட்டு பன்றிகளை துரத்திக் கொண்டு அங்கு வந்தனர். அவர்கள் கைகளில் 5 துப்பாக்கிகள் வைத்திருந்தனர். பன்றிகள் பார்வதியின் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து ஓடியது. உடனே பன்றிகள் மீது அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்கள்.
இதில் குறி தவறி அங்கே நின்றுகொண்டிருந்த பார்வதியின் முதுகில் 2 குண்டுகள் பாய்ந்தன. அவர் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தார். இதைப்பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் துப்பாக்கி குண்டு வெடித்த சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பார்வதியை மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் பலியான சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
காட்டுபன்றியை சுட வந்தவர்கள் கைத்துப்பாக்கிகளை பயன்படுத்தி இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating