ரேசன் கடை பெண் ஊழியருக்கு மாவட்ட வழங்கல் அதிகாரி டார்ச்சர்: விசாரணை அறிக்கை கலெக்டரிடம் சமர்ப்பிப்பு!!
திருச்சி செம்பட்டில் அமராவதி கூட்டுறவு சங்க ரேஷன் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக இருப்பவர் பாத்திமா (வயது35).
இவர், ரேஷன் கடைக்கு ஆய்வு செய்ய வரும் மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் தன்னிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், தொடர்ந்து தனக்கு டார்ச்சர் கொடுப்பதாகவும் இதனால் தான் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கடந்த 5–ந்தேதி கலெக்டர் பழனிச்சாமியிடம் பாத்திமா புகார் கூறினார்.
இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மிருனாளினி, இணைப்பதிவாளர் ரவிசந்திரன் ஆகியோருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மாவட்ட வழங்கல் அலுவலர் ரஜேந்திரனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், ரேஷன் கடை விற்பனையாளர் பாத்திமா ரூ.16 ஆயிரத்து 175 முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்படும் என பயந்து தன் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளதாக மறுப்பு தெரிவித்தார்.
அதன் பிறகு கூட்டுறவு சங்க அதிகாரிகள் புகார் கூறிய ரேஷன் கடை விற்பனையாளர் பாத்திமாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் ஆய்வுக்கு ரேஷன் கடைக்கு வந்த போது பொதுமக்கள் மத்தியில் தன்னிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆடியோ ஆதாரத்தை கொடுத்தார்.
அதில் அதிகாரி ராஜேந்திரன் பாத்திமாவிடம் உன்னை போல மோசமான பெண்ணை பார்த்ததில்லை. உனக்கு இந்த ட்ரீட்மெண்ட் போதாது. வேறு ட்ரீட்மெண்ட் இருக்கு. அதை கொடுத்தால் தான் சரியாக இருக்கும் என்று பேசிய ஆதாரத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் விசாரணை அறிக்கை மற்றும் ஆடியோ ஆதாரத்தையும் கலெக்டர் பழனிச்சாமியிடம் இன்று சமர்பித்தனர். இதன் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
Average Rating