செய்யாறில் 2 போலி டாக்டர்கள் கைது!!
செய்யாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகப்படியான போலி டாக்டர்கள் உள்ளதாகவும், அவர்கள் பொது மக்களுக்கு மருந்து மாத்திரை வழங்கி ஊசி போடுவதாக கலெக்டர் ஞானசேகரனுக்கு புகார் வந்தது.
அவருடைய உத்தரவின் பேரில் நலப்பணிகள் இணை இயக்குநர் எம்.கே.விஜயகுமார் மற்றும் மருத்துவ குழுவினர், செய்யாறு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஸ்வரி மற்றும் போலீசார் செய்யாறு பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது கொடநகர் பகுதியை சேர்ந்த குமார் (வயது 47) என்பவர் தனது வீட்டில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். விசாரணையில் குமார் 10–ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பது தெரியவந்தது. உடனடியாக குமாரை கைது செய்து, சிகிச்சைக்கு பயன்படுத்திய ஊசி, மருந்து மற்றும் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இதே போல புதுத்தெருவில் சிவக்குமார் (44) என்பவரும் தன்னுடைய வீட்டில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து கொண்டு இருந்தார். இவர் 5–ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
இது தொடர்பாக இணை இயக்குநர் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்து உடனடியாக 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating