என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக மத்திய மந்திரிகள் பெயரில் மோசடி: கேரள தம்பதி கைது!!
கேரளாவில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு இடம் எடுத்து தருவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இது தொடர்பாக பணத்தை இழந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கொச்சி போலீசில் புகார் செய்தனர்.
அதில், தங்களை ஏமாற்றிய கும்பல் மத்திய மந்திரிகளின் சிபாரிசால் என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதாகவும், அவர்களை கண்டுபிடித்து பணத்தை மீட்டுத்தருவதோடு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் கூறி இருந்தனர்.
இதுபற்றி கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கொச்சியை சேர்ந்த ஜெயேஷ் ஜெ. குமார், அவரது மனைவி ராரி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சில நாட்களுக்கு முன்பு போலீசார் அவர்களை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் ஜெயேஷ் ஜெ. குமார்–ராரி தம்பதிகளின் வீட்டை சோதனை செய்தனர். அங்கு சில மத்திய மந்திரிகளின் புகைப்படங்கள், ஏராளமான மாணவர்களின் விலாசங்கள், அவர்களின் சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஜெயேஷ் ஜெ. குமார்–ராரி தம்பதியரிடம் இருந்து சில சொகுசு கார்களையும் கைப்பற்றினர். இது தொடர்பாக கைதான தம்பதியிடம் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு பா.ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த பிரமுகர் குறித்தும் ரகசிய விசாரணையில் இறங்கி உள்ளனர்.
Average Rating