நர்சு தற்கொலை எதிரொலி: காதலிப்பதாக நடித்து பெண்களை ஏமாற்றிய வாலிபர் கைது!!
திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூரை அடுத்த தோப்பில் பகுதியை சேர்ந்தவர் அமல் (வயது 21). இவரும் சிறையின்கீழ் முடப்புரம் பகுதியை சேர்ந்த சுனி (21) என்பவரும் காதலித்து வந்தனர். சுனி அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார்.
சுனியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த அமல் அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து உள்ளார். மேலும் சுனியுடன் தனது செல்போனில் புகைப்படமும் எடுத்து உள்ளார். நாளடைவில் அமலின் நடவடிக்கைகள் சுனிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்ததும் அவரை விட்டு விலகினார்.
இந்த நிலையில் சுனிக்கு அவரது வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயித்தனர். இந்த தகவல் தெரிய வந்ததும் சுனியை அமல் மிரட்டினார். தனக்கு பணம் தராவிட்டால்தான் எடுத்து வைத்துள்ள போட்டோக்களை வெளியிடுவேன் என்று மிரட்டினார்.
ஆனால் சுனி பணம் கொடுக்க மறுத்ததால் அவரது புகைப்படங்களை சுனியின் வருங்கால கணவருக்கு அமல் அனுப்பி விட்டார். இதனால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விட்டனர். திருமணம் நின்றதால் மனமுடைந்த சுனி வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சுனியின் செல்போன் மற்றும் அவரது டைரி மூலம் துப்புதுலக்கியதில் அமல் பற்றி போலீசாருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அமலை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் மேலும் பல பெண்களை காதல்வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து விட்டு கைவிட்டது தெரிய வந்தது. மேலும் பல பெண்களை மிரட்டி அமல் பணம் பறித்து உள்ளதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அமலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating