துருத்திக் கொண்டும் உறுத்திக் கொண்டும் இருக்கும், ‘இலங்கை தமிழரசுக்கட்சி’யின் அம்மணம்! – அ.ஈழம் சேகுவேரா (கட்டுரை)!!

Read Time:31 Minute, 21 Second

timthumb (2)துருத்திக்கொண்டும் உறுத்திக்கொண்டும் இருக்கும் ‘இலங்கை தமிழரசுக்கட்சி’யின் அம்மணம்! – அ.ஈழம் சேகுவேரா
‘தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளில் ஒன்றாகிய இலங்கை தமிழரசுக்கட்சிக்கு 51 சதவீதமும், ஏனைய மூன்று கட்சிகளுக்கும் 49 சதவீதமும் வழங்கும் வகையிலேயே புரிந்துணர்வு உடன்படிக்கை மாற்றப்படவேண்டும். அவ்வாறு மாற்றப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கையிலேயே, இலங்கை தமிழரசுக்கட்சி கையொப்பமிடும்!’

இவ்வாறு ஒரு செய்தி, தமிழ் – சிங்கள புத்தாண்டு நாளன்று வலை உலாவியில் உலாவவிடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று (ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட்) கட்சிகளினாலும் இணக்கம் காணப்பட்டு, அதன்பின்னர் இலங்கை தமிழரசுக்கட்சியிடம் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில்,

 அனைத்து தேர்தல்களிலும் நான்கு கட்சிகளுக்கும் சமமான ஆசனப்பங்கீடு.
 தனியொரு கட்சியின் (இலங்கை தமிழரசுக்கட்சியின் வீடு) சின்னத்தை தவிர்த்து, நான்கு கட்சிகளும் ‘பொதுவான சின்னம்’ ஒன்றின் கீழ் தேர்தல்களில் போட்டியிடுதல். அல்லது நான்கு கட்சிகளும் தமக்கென்று கொண்டிருக்கக்கூடிய சின்னங்களை சுழற்சி முறையில் பயன்படுத்துதல்.
 கூட்டமைப்பின் தலைவர் பதவியை சுழற்சி முறையில் வகித்தல்.

 ஏதேனும் ஒரு கட்சியின் உறுப்பினரை மற்றுமொரு கட்சி ஆள்பிடிப்புச்செய்ய முடியாது. அவ்வாறு ஆள்பிடிப்பு நடைபெறுமாயின் அடுத்துவரும் பன்னிரண்டு வருடங்களுக்கு கட்சி மாறிய குறித்த உறுப்பினர் அனைத்து வகையான தேர்தல்களிலும் போட்டியிட முடியாது.

என்பன உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் வலியுறுத்தப்பட்டிருந்ததாக அறியமுடிகின்றது.
குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில், இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுடன் பேசியே, தமது கட்சியின் முடிவை கூறமுடியும் என்று அக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா தெரிவித்திருந்த நிலையில்,
தேர்தல்களில் ஆசனப்பங்கீடு உள்பட அனைத்து விடையங்களிலும் தமிழரசுக்கட்சிக்கு 51 சதவீதம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இணங்கும் பட்சத்திலேயே புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்று கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் மற்றும் மத்தியகுழு உறுப்பினர்கள் கூடிப்பேசி முடிவெடுத்துள்ளதாகவும், இதுவே தமது கட்சியின் நிலைப்பாடெனவும் தெரிவித்து குறித்த செய்தி கசியவிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னைய நாள்களில் எல்லாம் கசியவிடப்பட்டுள்ள உப்புச்சப்பற்ற தகவல்கள், முகம் முகவரியற்ற செய்திகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து, முந்திக்கொண்டு அறிக்கை போர் தொடுத்துவந்த இலங்கை தமிழரசுக்கட்சியினர், 51க்கு49 சதவீதம் செய்தி தொடர்பில் மௌனம் சாதிப்பதிலிருந்து, ‘சதவீத பங்கீடு’ அவர்களின் மெய்நிலைப்பாடு என்பது புலனாகின்றது.

இன்னுமொரு விடையத்தையும் நீங்கள் இங்கு கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். ‘தமது கட்சியின் நிலைப்பாடு இதுதான், இன்னதுதான்’ என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவும் திராணியற்றுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியினர், ‘வீட்டுக்கு ஒரு பிள்ளையை விடுதலைப்போருக்கு, அதுவும் ஆயுதப்போராட்டத்துக்கு உவந்தளித்துள்ள தமிழ் சமுகத்துக்கு’ தலைமை கொடுக்கப்போகின்றார்களாம்?

சுயமரியாதைக்காகவும், அரசியல் உரிமைக்காகவும் ஒப்பற்ற தியாகங்களை செய்துள்ள தமிழ் தேசிய குடியினத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிவந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பை ‘பங்குவர்த்தக கம்பனி’யாக மாற்றியிருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் 51க்கு49 சதவீத அறிவிப்பை முன்னிறுத்தி சில கேள்விகள்!
முதலாவதாக:

சிறீலங்கா இனவெறி பாசிஸ்ட்டுகளிடமிருந்து தன்னாட்சி அதிகார அலகை வலியுறுத்தி அறுபது வருட காலத்துக்கும் மேலாக போராடிக்கொண்டிருக்கிற தமிழினத்தை மெய்யாகவே பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகளா இவர்கள்? என்ற கேள்வியே பெருத்த ஐயமாக – அச்சுறுத்தலாக தொக்கு நிற்கின்றது.
மத்திய அரசிடம் ‘அதிகாரப்பகிர்வு, சமத்துவம், சமவாட்சி’ தொடர்பில் கோருவதற்கு இவர்களுக்கு என்ன லாயக்கு இருக்கிறது? அதைத்தர மறுக்கும் மத்திய அரசை விமர்சிப்பதற்கு இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? முதலில் இவர்கள் தமது கோவணத்தை பழுது பார்க்கட்டுமே! முதலில் கட்சிக்குள் அதிகாரப்பகிர்வுக்கு பாழாய்ப்போன மனசு இளகி இடம்கொடுக்கட்டும். அதன்பின்னர் நாட்டுக்குள் அதிகாரப்பகிர்வு பற்றிப்பேசலாம்.
இந்த நான்கு கட்சிகளும் (இலங்கை தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட்) தமக்குள் ‘அதிகாரப்பகிர்வுக்கு, சமமான வளப்பங்கீடுக்கு’ தயாரில்லாத நிலையில், இவர்களா மத்திய அரசிடம் மல்லுக்கட்டி தமிழ் தேசிய குடியினத்துக்கு ‘அரசியல் தீர்வு, சமவாட்சி, விடுதலை’யை பெற்றுக்கொடுக்கப்போகின்றார்கள்? இன்னும் எத்தினை காலத்துக்கு தமிழினம் இவர்களை நம்பிக்கொண்டிருக்கப்போகின்றது. ‘பட்டு வேஷ்டி கனவில் இருந்தால் கட்டியிருக்கிற கோவணமும் களவு போவது, அன்றி உருவப்படுவது நிச்சயம்!’
இரண்டாவதாக,

தனிச்சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பாளர்களால், இலங்கை நாட்டின் தேசிய குடியினங்களில் ஒன்றாகிய தமிழினத்தின் மொழி கலை கலாசாரம் மரபுரிமை எல்லாமே அத்துமீறப்பட்டு சிதைக்கப்பட்டு, அந்த இனம் தனது சுயத்தை சடுதியாக தொலைத்துக்கொண்டிருக்கின்றது.

ஆனால் இவர்களுக்கோ, தமிழினம் தனது சுயத்தை தொலைத்துக்கொண்டிருப்பது தொடர்பில் எவ்வித சலனமோ சஞ்சலமோ இருப்பதாகத்தெரியவில்லை. மாறாக தத்தமது கட்சியின் சுயத்தை பராமரிப்பதிலும், கட்சியை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலுமே தமது முழுக்கவனத்தையும் செலுத்திவருவதையே அவதானிக்க முடிகின்றது. மொத்தத்தில் இங்கு கட்சியை பாதுகாக்க நபர்கள் உண்டு. மக்களை பாதுகாக்க யார் உளர்?
மூன்றாவதாக,

தனி மனித உரிமைகள் ஆகட்டும். ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் கூட்டு உரிமைகள் ஆகட்டும், உரிமைகள் மறுக்கப்படும் போது, அந்த உரிமைகளுக்காக புவிப்பிரபஞ்சத்தில் உயிர்க்கொடைகளைக்கூட செய்துள்ள குடியினம் தமிழ் தேசியக்குடியினம்!

ஒருமில்லி செக்கன்கூட மக்கள் நலன் – தேசிய பாதுகாப்பைத்தவிர வேறு எவற்றையும் முன்னிறுத்தி கற்பனை செய்து பார்க்காத, அக்கணமே உயிரை மாய்த்துக்கொள்ளும் ‘சயனைட் குப்பிகள்’ சதா கழுத்திலாட அக்கினிக்குஞ்சுகள் உலாவிய வீரம் விளைந்த நிலம்: தமிழ் நிலம்!

இரத்தச்சேறாகிக்கிடக்கும் அத்தகையதொரு நிலத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியினர், ‘ஆசன ஒதுக்கீடு உட்பட 51 சதவீத பங்கீடு’ என்று கூச்சநாச்சமின்றி சுட்டிக்காட்டி கேட்டிருப்பது, அதாவது‘கந்தகப்புயல்கள் அடித்த தேசத்தில் கதிரைகள் கேட்பது’, அவர்கள் தமது மானம் காக்க கட்டியிருந்த கடைசி கோவணத்துண்டையும் கழற்றிப்போட்டுவிட்டு சந்தி சிரிக்க நின்றுகொண்டிருக்கும் செயலுக்கு ஒப்பானதாகும்.

நான்காவதாக,
2009ம் வருடத்துக்குப்பின்னரான இந்த ஆறு வருட காலங்களில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தலையீடுகள், பௌத்த மயமாக்கல், பொதுமக்களின் அமைதிக்கு ஊறுசெய்விக்கும் – பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுவிக்கும் இராணுவ வல்வளைப்புச்சூழமைவுகள், காணி களவு, இயற்கை-கனியவளச்சுரண்டல்கள், சட்டவிரோத காடழிப்புகளின் ஊடே இடம்பெறும் தமிழர் இனவிகிதாரத்தை சீர்குலைக்கும் குடியேற்றங்கள், இவ்வாறு தமிழ் மக்களின் நெஞ்சை அழுத்தும் குரல்வளையை நெரிக்கும் தவிர்க்க முடியாததும் அத்தியாவசியமானதுமான பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி ‘சிவில் அமைப்புகள்’ பலவும் தீவிரமாக போராடியே வந்திருக்கின்றன/வருகின்றன.
அரச பயங்கரவாதத்துக்கு எதிரான இத்தகைய கண்டன-கவனவீர்ப்பு-எதிர்ப்பு போராட்டங்களின் போதெல்லாம், கணக்கெடுப்புக்காகவேணும் தலைகாட்டாத இலங்கை தமிழரசுக்கட்சியினர், ‘தாய்க்கட்சி-தலைமைக்கட்சி, தலைமை கொடுக்கப்போகின்றோம்’ என்றவாறெல்லாம் பிதற்றிக்கொண்டிருக்கின்றனர். இவர்களை வருடத்தின் ‘சரியான காமெடியர்கள்’ விருதுக்கு தெரிவுசெய்யலாமே தவிர, ‘தலைமைத்துவத்துவம்’ என்பதெல்லாம் இந்த காமடியர்களுக்கு எட்டாக்கனியே! இந்த ‘ஸீரோ’க்கள் தம்மை ‘ஹீரோ’க்களாக வைத்து தமிழ் சமுகம் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பது ‘நம்பர் ஒன்’ முட்டாள்த்தனமாகும்.

இலங்கைத்தீவில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில், இன்னும் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு சிறீலங்கா அரசாங்கத்துக்கு பெரும் குடைச்சலாக இருக்கப்போகின்ற விவகாரம் ‘கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர்’ பிரச்சினையாகும். இந்தப்பிரச்சினை தொடர்பிலான போராட்டங்களுக்கு சிறு துரும்பைத்தானும் தூக்கிப்போட்டு, போராட்டத்தின் உயிர்ப்பை நீர்த்துப்போகவிடாமல் வைத்திருக்க கையாலாகாதவர்கள், 51க்கு49 என்று பேரம் பேசுவது நகைப்பாக இருக்கிறது.

அதிலும் தமிழ் மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகள் ஏதாவது ஒன்றில், சிறீலங்கா அரசுடன் இத்தகைய பேரத்தைப்பேசி கிடுக்குப்பிடி போடுவதற்கு வக்கற்றவர்கள், கூட்டமைப்புக்குள் பேரம் பேசியிருப்பது இவர்கள் ‘சந்தை கடையும் – மளிகை கடையும்’ நடத்துவதற்கே தகுதியானவர்கள் என்பதை, அப்படியே அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகின்றது.
ஐந்தாவதாக,

“சுன்னாகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நிலத்தடி நீரில் எண்ணெய் (கழிவோயில்) கலந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் கிணற்று நீரை குடிப்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் – பிரச்சினைகள் தொடர்பில்,
இத்தனைக்கும் “தனியொரு மனிதனுக்கு நீரில்லையேல் ஜகத்தினையும் அழித்திடுவோம்” என்று உறுதியேற்று, யாழ்ப்பாணம் மாவட்ட கல்விச்சமுகமும், மருத்துவர்கள் சமுகமும் ‘எதிர்கால சந்ததியினரின் இருப்பையும் அவர்களுக்கு நிகழ்காலத்தில் சீவிப்பவர்கள் கையளிக்கப்போகும் சூழலையும்’ முன்னிறுத்தி அர்ப்பணிப்புடன் விழிப்புணர்வு மற்றும் கவனவீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் சூழலில்,
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா இத்தனைக்கும் இவர் யாழ்ப்பாணம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். ‘சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் கிணற்று நீரை குடிக்கலாமா? என்று கூடத்தேவையில்லை, அந்த நீரில் உடுபிடவைகளைத்தானும் அலசலாமா? சலவை செய்யலாமா? (துவைக்கலாமா) என்றுகூட மக்களுக்கு பொறுப்புக்கூறாமல் இருந்துவருவதில் ஏதொவொரு மர்மம் ஒன்று உள்ளது.

‘தான் யாழ்ப்பாணம் மாவட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரே இல்லை’ என்பது போல், எவ்வித சலனமும் சமயோசிதமும் இன்றி அயோக்கியதனமாக இருந்துவரும் மாவை.சேனாதிராசா, ஏன் சுன்னாகம் கழிவோயில் நீர் பிரச்சினையிலும் முந்திக்கொண்டு 51 வீதத்தை எடுத்துக்கொண்டு மக்களுக்கு பொறுப்புக்கூறியிருக்கலாமே?

தமிழ் மக்களின் இருப்புக்கு – பாதுகாப்புக்கு – வாழ்வுரிமைக்கு சவால் மற்றும் அச்சுறுத்தல் விடுவிக்கும் பிரச்சினைகள் சம்பவங்களின் போதெல்லாம் ‘பூச்சியம் மைனஸ்’ (-0) வீதத்தை எடுத்துக்கொள்வோம், ஆனால் ‘பாராளுமன்ற கதிரை’ என்று மட்டும் வந்துவிட்டால் ‘ஹன்ட்ரெட் பிளஸ்’ (+100) வீதத்தையும் வாரிச்சுருட்டிக்கொள்வோம் என்றால் என்னங்க இதுநியாயம்?
ஆறாவதாக,

எல்லாவற்றிலும் 51 சதவீதம் என்று கேட்டிருப்பதானது சாதாரணமான விடையமல்ல. அதில் மிகப்பெரிய நஞ்சுத்தன்மை இருக்கிறது. விஷம் ஆழமாக இறங்கியிருக்கிறது. அது என்னவென்றால் கூட்டமைப்புக்கென்று மாவட்ட குழுக்களை நியமித்தால் என்ன, இளைஞர் அணியை கட்டமைத்தால் என்ன, தேர்தல் நியமனக்குழுவை உருவாக்கினால் என்ன, நிதிக்குழுவை அமைத்தால் என்ன? இவை எல்லாவற்றிலும் இலங்கை தமிழரசுக்கட்சியினர் தமது பெரும்பான்மையை தக்க வைத்துக்கொள்வதற்கு நரித்தனம் பார்த்துள்ளனர். எடுகோளாக: ‘கூட்டமைப்பின் பெயரால்’ புலத்திலிருந்தோ அன்றி வேறு ஏதேனும் வழிமுறைகளினூடோ ஒருதொகை நிதிவரவு கிடைக்கப்பெற்றால், அத்தொகையில் பெருந்தொகையை களவாடும் கள்ளத்தனமும் கொள்ளைப்புத்தியும் இதில் கூடவே இருக்கின்றது.

ஏழாவதாக,
ஈழதேசத்தின் ஆத்மா, எங்கள் இதயத்தின் இயக்கம், எமது விடுதலை வானின் பேரொளி, தமிழ் தேசிய இனத்தின் பேராண்மை ‘தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்’ அவர்களையும்,‘விடுதலைப்போராட்ட இயக்கம்’ ஆகிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அண்மைக்காலமாக இலங்கை தமிழரசுக்கட்சியினர் ‘பயங்கரவாதிகள்’ என்று பயங்கரமாக விமர்சித்து வருகின்றனர்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன், இந்நாள் தலைவர் மாவை.சேனாதிராசா, அக்கட்சியின் நிகழ்கால நீலன் திருச்செல்வம் சுமந்திரன், சுமந்திரன் தத்தெடுத்திருக்கும் வாரிசு கேசவன் சயந்தன் (வடமாகாணசபை உறுப்பினர்), அக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களில் ஒருவராகிய அன்டனி ஜெகநாதன் (வடமாகாணசபை உறுப்பினர்) என்று, ஈழ விடுதலைப்போராட்டத்தை விமர்சிப்பவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது.

இரா.சம்பந்தன் 2000ம் வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்த தோல்வியில் ‘பேயரைந்து சித்தமும் கலங்கி’ நின்ற அன்றைய ‘அலங்கோல நிலையை’ மீள்நினைவு செய்து பார்ப்பாராயின், இன்று அவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பெயரால் வாக்குப்பொறுக்க பயன்படுத்தும் ‘தமிழ் தேசியக்கூட்டமைப்பு’ எனும் பிச்சைப்பாத்திரத்தின் அருமை பெருமை அவருக்கு நன்றே உரைக்கும்!

தமது நல்லகுல பிறப்பில் இவர்களுக்கு கடுகளவேனும் சந்தேகம் இல்லை என்றால், ‘நாங்கள் கறை படியாதவர்கள். அப்பழுக்கற்றவர்கள். ஐயகோ! உலக மகாபயங்கரவாதி பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பில் உறுப்புரிமை வகித்து எங்களது கௌரவம்-அந்தஸ்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. அது எங்களுக்கு கெடுதலையே தரும். எங்கள் மானம் மரியாதை எல்லாமே என்னாவது?’ என்று கூறிவிட்டு, கூட்டமைப்பிலிருந்து வெளியேறிச்செல்ல வேண்டும்.

அப்படியே சூடு சொரணை இருந்தால், இலங்கை தமிழரசுக்கட்சியின் பெயராலோ, சுயேட்சையாகவோ தேர்தலை சந்தித்து வெற்றியீட்டி காட்டவும் வேண்டும். சவாலை சமாளிக்க தயாரா வெள்ளையும் சொள்ளையுமாக வேசம் போடும் அறிவிலிகளே? அதைவிடுத்து வாக்குப்பொறுக்கிகளாகிய நீங்கள், மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய கூட்டமைப்பை கட்டிப்பிடித்துக்கொண்டு தலைவரை ‘பயங்கரவாதி’ என்று தூற்றிக்கொண்டிருப்பதானது, உங்கள் தாயை, ‘வேசை-தாசி’ என்று நீங்களே வசைபாடிக்கொண்டிருப்பதற்கு (ஒத்துக்கொண்டமைக்கு) ஒப்பானதாகும்!

ஈழ மண்ணில் ஒரு மில்லிசெக்கன் கூட கூட்டமைப்பின் தலைவராக வாழவும், தன்னை அடையாளப்படுத்தவும் லாயக்கற்ற இரா.சம்பந்தன், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ‘பதிவு விவகாரத்துக்கு’ தீர்வு காண முடியாமல் ஒன்னாது தவிக்கும் இரா.சம்பந்தன், ‘இனப்பிரச்சினைக்கு’ தீர்வு காணப்போகின்றேன் என்று கதையளப்பது (காதில் பூச்சுற்றுவது), ‘கூரை ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன்’ என்று அளப்பறை செய்வதற்கு நிகரானது.

கூடவே கனகச்சிதமாக மரபுவழிப்படையணிகளை கட்டமைத்து நடைமுறை நிர்வாக ஈழ அரசை நிருவி உலக இராஜதந்திர வகுப்பாளர்களையே தன் காலடிக்கு கொண்டு வந்து சேர்ப்பித்த மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மதிநுட்பத்தோடு, கூட்டமைப்பு பதிவு விவகாரத்தில் இரா.சம்பந்தனின் கையாலாகாத்தனத்தை ஒப்பிடும் போது, இரா.சம்பந்தன் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு வாழ்த்துரைப்பதற்கு கூட தகுதியற்றவராவார்.
எட்டாவதாக,
‘சுயமரியாதை’ சமுகமாக மேலெழுந்து வருவதற்காகவே தமிழ் சமுகம் அறுபது வருட காலத்துக்கும் மேலாக போராடிக்கொண்டிருக்கின்றது. இந்த ‘சுயமரியாதை வாழ்க்கை’க்காகவே கடுமையான இழப்புகளையும் வலிகளையும் அவலங்களையும் கூட சந்தித்துள்ளது/சந்தித்து வருகின்றது. ஆதலால் தமிழ் மக்களின் ‘சுயமரியாதை’யை எவரும் அவ்வளவு இலகுவில் கேள்விக்குள்படுத்த முடியாது. அப்படி எவராவது விசமத்தனமாக முயற்சித்தால் அதனை கைகட்டி நின்று வேடிக்கைப்பார்த்தல் ஆகாது.

ஆனால் அதே ‘சுயமரியாதை’யை, கூட்டமைப்புக்குள்ளே இலங்கை தமிழரசுக்கட்சி கேள்விக்குள்படுத்தும் சந்தர்ப்பங்களின் போதும், கூட்டமைப்புக்குள்ளே இலங்கை தமிழரசுக்கட்சி கடைப்பிடித்துவரும் ‘ஜனநாயக விரோதப்போக்குகள் – மனித உரிமை மறுப்பு’ சம்பவங்களின் போதும், சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினர் அவற்றுக்கு எதிராக குறைந்தபட்சமேனும் குரல் உயர்த்தி கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பதனை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.

உண்மையில் வாழ்வுரிமைக்காக ஆயுத போராட்ட வழிமுறையை தேர்ந்தெடுத்த கட்சிகள் எவையாயினும் இதைத்தான் செய்யும். நிச்சயம் செய்யவும் வேண்டும். ஆனால் இவர்கள் ஆயுத போராட்ட இயக்கங்களின் தலைவர்கள் தானா? என்று சந்தேகம் எழுப்பும் அளவுக்கு கூட்டமைப்புக்குள் உறுப்புரிமை வகிக்கும் செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), த.சித்தார்த்தன் (புளொட்) ஆகியோரது செயல்பாடுகள் உள்ளமை, அது இவ்விரண்டு கட்சிகளையும் நம்பி வாக்களித்த மக்களுக்குக்கூடவாவது நன்மை பயக்காது.

எத்தகைய மறுப்புமின்றி – எதிர்ப்புமின்றி, இலங்கை தமிழரசுக்கட்சியின் சர்வாதிகாரத்தனத்தோடு இவர்கள் இசைந்து குலைந்து மசிந்து போவதானது,

‘நீளக்கால்சட்டையிலிருந்து எங்களை வேஷ்டிக்கு மாற்றிவிட்டீர்கள். இப்போது நாங்கள் உடுத்தியிருக்கும் வேஷ்டியை வேண்டுமானாலும் உருவி எடுத்துக்கொள்ளுங்கள். ஏன் உங்களை பருத்தித்துறை முதல் தெய்வேந்திரமுனை வரைக்கும் வேண்டுமானாலும் முதுகில் சவாரி ஏற்றிக்கொண்டு போகின்றோம். ஆனால் தேர்தல் என்று வரும்போது ஆசன ஒதுக்கீட்டை மட்டும் தயவுபண்ணி தந்துவிடுங்கள்’என்று இலங்கை தமிழரசுக்கட்சியிடம் இரந்து கேட்பது போன்றதான அருவருப்பான – அசிங்கமான தோற்றப்பாட்டையே தருகின்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியினர் குட்டக்குட்ட இவர்கள் குனிந்துகொண்டே இருப்பது அன்றி, ஒப்புக்கு அண்ணன் தம்பி உறவுச்சண்டை போல எதிர்ப்பை வெளிப்படுத்துவதும் பின்னர் கூடிக்குலாவி கலந்திருப்பதும் தமிழ் இனத்துக்கும் தமிழ் தேசிய அரசியலுக்கும் ஆரோக்கியமானதாகாது. விடுதலை நோக்கிய அரசியல் பயணத்துக்கு உகந்ததுமல்ல.

‘தமிழ்த்தேசியம், தனித்தமிழ் தாயகம், சுயாட்சி’ இக்கோட்பாடுகளை குப்பைத்தொட்டிக்குள் கடாசி வீசியிருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தயவை உதறித்தள்ளிவிட்டு ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் இந்த மூன்று கட்சிகளும் தன்முனைப்பு உந்துதலோடு, அதாவது ‘போராளிகளுக்கே உரித்தான மிடுக்கோடு’ புறப்பட்டு வருவார்களாயின் மட்டுமே ‘தமிழ் தேசியக்கூட்டமைப்பு’ உருப்படும். நிலைபெறும்!
அதே ‘தமிழ்த்தேசியம், தனித்தமிழ் தாயகம், சுயாட்சி’யை கோரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் இவர்களோடு இணைந்து கொள்வார்களாயின் இன்னும் கூடுதல் பலம்பெற்று தமிழ் மக்களுக்கு கனதியான – காத்திரமான அரசியல் தலைமைத்துவத்தை கொடுக்க முடியும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அரசியல் இருப்பானது சாத்தியப்படல் வேண்டுமாயின், ‘தன்முனைப்பு உந்துதலிலேயே’ அது தங்கியுள்ளது. மெய்யாகவே போராளி இயக்கங்களை சேர்ந்தவர்களாயின் அவசியம் ‘தன்முனைப்பு உந்துதல்’ என்பது இவர்களுக்கு உள்ளுர இருத்தல் வேண்டும். இல்லாவிட்டால் இவர்களில் எங்கோ பழுதுகளும் குறைபாடுகளும் உண்டு என்றே அர்த்தப்படும். எல்லா ஆயுதங்களும் தீர்ந்த/செயலிழந்த பின்னர் கர்ணனின் இறுதித்தாக்குதல் ஆயுதம் ‘நாகாஸ்திரம்’ போன்று ‘தன்முனைப்பு உந்துதலை’ சுரேஸ், செல்வம், சித்தார்த்தன் பயன்படுத்த வேண்டும்.
அவ்வாறு பயன்படுத்திவிட்டால் போதும், இன்று மூக்கணாங்கயிறு அறுத்த முரட்டுக்காளையாக கட்டுப்பாடுகளற்று வரம்பு பாய்ந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியினர், ‘ஐயகோ இது முறையோ? நீங்க கூட்டமைப்பு என்று சொல்லிக்கொண்டு மக்களிடம் போனால், நாங்க என்ன தமிழரசுக்கட்சி என்று சொல்லிக்கொண்டா மக்களிடம் வாக்கு கேட்டுப்போகமுடியும்?’ என்று கிலிபிடித்தவாறு இவர்கள் மூவரையும் நோக்கி திரும்பி ஓடிவந்து ஒட்டுண்ணியாய் ஒட்டிக்கொள்ளும் அதிசயம் நிகழ்வதற்கும் வாய்ப்புகள் உண்டு.
தனித்து மேய்ந்து கொண்டிருந்த மந்தைகளை புலி ஒன்று ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றாக அடித்துக்கொன்று இரையாக்கி உண்டு வந்ததாம். முடிவில் வலி, இழப்பு, கூட்டுப்பலத்தின் சக்தியை-நன்மையை பட்டுணர்ந்துகொண்ட மந்தைகள் கூட்டமாக சேர்ந்துகொண்டு அதே புலியை அந்த வனத்தை விட்டே ஓட்டி களைத்தனவாம்.
சிறுவயதில் கற்றுக்கொடுத்த ‘கூடி ஒன்றாய் வாழ்ந்து பாரு கோடி நன்மையே, குழப்புகின்ற எவருக்குமே உண்டு அழிவே!’ இந்த அநுபவக்கதைக்கு ஒப்ப ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் இந்த மூன்று கட்சிகளும் தமது ‘கூட்டுப்பலத்தை’ உணராதிருப்பதைப்போன்றதொரு அப்பாவித்தனம்/கோழைத்தனம் வேறொன்றும் இல்லை இந்த உலகத்தில்!
இலங்கை முல்லைத்தீவிலிருந்து…
சுயாதீன இளம் ஊடகவியலாளர்,
-அ.ஈழம் சேகுவேரா-

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை: தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது!!
Next post கோவை கோட்ட போக்குவரத்து கழகத்தில் ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு!!