சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கைவிரல்கள் ஒட்டிப் பிறந்த சிறுமிக்கு நவீன சிகிச்சை!!
பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்வராயன் கோட்டையை சேர்ந்தவர் சரவணன், விவசாயி. இவரது மகள் அனன்யா (வயது4). பிறக்கும் போதே அவளது வலது கை விரல்கள் ஐந்தும் ஒட்டி இருந்தது. இதனால் அவளால் வேலைகளை எளிதாக செய்ய முடியவில்லை.
பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து அனன்யாவை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். டாக்டர்கள் நெல்லையப்பன், ரமாதேவி, ராதாகிருஷ்ணன், சுகுமார், ஜெயக்குமார் ஆகியோர் சிறுமியின் ஒட்டி இருந்த கை விரல்களை பிரித்து பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சிகிச்சை அளித்தனர். தற்போது சிறுமி நலமுடன் உள்ளார்.
இது குறித்து டீன் கார்குழலி கூறும்போது, ‘‘கைவிரல்கள் ஒட்டி பிறந்த சிறுமி அனன்யாவுக்கு நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவளது கை விரல்களின் எலும்புகள் ஒட்டி இருந்தன. அவற்றை பிரித்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளோம். அவளால் எல்லோரையும் போல் கை விரல்களால் எல்லா வேலையும் செய்ய முடியும்.
இது போன்ற சிகிச்சைகளை தனியார் ஆஸ்பத்திரியில் செய்தால் பல லட்சம் செலவாகும். சிறுமிக்கு காப்பீடு திட்டம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
விரல்கள் ஒட்டி பிறந்தவர்கள் சிறு வயதிலேயே இது போன்ற சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
Average Rating