செம்மரக்கட்டை கடத்தலை தடுத்த சோதனை சாவடி ஊழியர் லாரி ஏற்றிக் கொலை!!
ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தலை தடுக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ரேணுகுண்டா ராம கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சாம்பசிவா (41). ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஊழியராக இருக்கிறார்.
இவர் ரேணுகுண்டா சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது திருப்பதியில் இருந்து நாயுடு பேட்டை நோக்கி ஒரு லாரி வந்தது. அதனை சாம்பசிவா நிறுத்த முயன்றார். ஆனால் அது நிற்காமல் சென்றது.
உடனே அவர் ஊர்க்காவல்படை வீரர் விஜய் என்பவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி லாரியை விரட்டினார். தூக்கிவாக்கம் மேம்பாலத்தில் லாரி முன்பு பைக்கை நிறுத்தி அதனை வழிமறிக்க முயன்றார்.
ஆனால் லாரி சாம்பசிவா வந்த பைக்கை இடித்து தள்ளி விட்டு மின்னல் வேகத்தில் பறந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சாம்பசிவா அதே இடத்தில் பலியானார்.
லாரியில் செம்மரக்கட்டை கடத்தி வந்து இருக்கலாம் என்றும், அதனால்தான் அது நிற்காமல் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ரேணுகுண்டா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating