பெண்களை கேலி செய்ததால் மோதல்: கோவில் திருவிழாவில் வியாபாரி குத்திக் கொலை!!
திண்டுக்கல் அருகே உள்ளது கொடைரோடு ஜெகநாதபுரம். இங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாவூத்தன் பட்டியில் இருந்து அம்மன் ஊர்வலம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாவூத்தன்பட்டியைச் சேர்ந்த 6 பேர் பெண்களை கேலி கிண்டல் செய்தனர்.
இதனை ஜெகநாத புரத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 25), சேகர் (31) ஆகியோர் தட்டி கேட்டனர். இதனால் அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. பெரியவர்கள் சமரசம் செய்து சண்டையை விலக்கினர்.
அன்று இரவு கோவில் விழாவில் கரகாட்டம் நடைபெற்றது. அப்போது மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் சரவணன், சேகர் ஆகியோரை கத்தியால் சரமாரியாக குத்தினர். பலத்த காயமடைந்த அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தார். இவர் திருப்பூரில் பூண்டு வியாபாரம் செய்து வந்தார்.
இது தொடர்பாக அம்மைய நாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாவூத்தன்பட்டியைச் சேர்ந்த கார்த்திக்ராஜா (25), சுப்பிரமணி (17), குண்டு கார்த்திக் (17), பிரபாகரன் (16), முத்துக்குமார் (15), கார்த்திக் (18) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களில் கார்த்திக் ராஜாவை தவிர மற்ற 5 பேரும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Average Rating