பேயை ஓட்ட பெண்களுக்கு சாட்டையடி!!
விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் அருகே பெண்களை சாட்டையால் அடித்து பேயை விரட்டிய வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி என்ற கிராமத்தில் அஜ்ஜப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வருடந்தோறும் விஜயதசமி விழா அன்று ‘பேய்’ ஓட்டும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கமாம். பல தலைமுறைகளாக நடத்தப்படும் இந்த திருவிழாவில், பேய் பிடித்து தவிக்கும் பெண்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து விஜயதசமி அன்று குவிந்து விடுகிறார்கள். இக்கோவிலில் குரும்பர் இன மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள். இதேபோல் இந்த வருடமும் விஜயதசமி நாளான தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இவர்களில் பேய் பிடித்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் வரிசையாக மண்டியிட்டு அமர்ந்திருந்தனர். இவர்களுக்கு துணையாக உறவினர்கள் அருகிலேயே இருந்தனர். பூஜை துவங்கியதும் அஜ்ஜப்பன் கோவிலில் இருந்து காட்டுக் கோவிலுக்கு ஸ்வாமியை தூக்கிக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஒரு பூசாரியின் தலையில் தேங்காயை உடைத்து அதன் பின்னர் வரிசையாக அமர்ந்திருந்த பேய் பிடித்தவர்களை சாட்டையால் அடித்தார். பூசாரி அடித்ததில் பேய் பிடிக்காதவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பேய் பிடித்த சில பெண்கள், சாட்டையடி வாங்கியவுடன் கூட்டத்தின் நடுவே சாமி ஆட ஆரம்பித்தனர். அவர்களுக்கு சாட்டையடி பூசாரி பேயை ஓட்டினார். இது தவிர குழந்தை பாக்கியம், திருமணத் தடை, தீராத நோய்களில் இருந்த நிவாரணம் பெற என்று ஏராளமான பெண்கள் விரும்பி வந்து சாட்டையடியை பெற்றுக் கொண்டனர். இது தவிர 200க்கும் மேற்பட்ட ஆடுகளை தடியால் அடித்துக் கொல்லும் வினோத நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த வினோத நிகழ்ச்சிகளுக்கு மனித உரிமை அமைப்பினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.