கருங்கல் அருகே போலீசில் வேலை வாங்கி தருவதாக மோசடி: ஊர்க்காவல்படை தம்பதி கைது!!
அருமனை அருகே மஞ்சாலுமூட்டை சேர்ந்தவர் சிபு (வயது 28). இவரது மனைவி ஷைனி (26). இவர்கள் 2 பேரும் களியாக்காவிளையில் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார்கள்.
கருங்கல் அருகே தொலையாவட்டத்தை சேர்ந்த ரவீந்திரன் மகள் வினிஷா (23). இவரும் ஊர்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். வினிஷாவிடம் சிபு, ஷைனி ஆகியோர் ரெயில்வே போலீசில் வேலை வாங்கி தருவதாக கூறினர்.
இதற்காக வினிஷாவிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வினிஷாவிற்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து வினிஷா பணத்தை திரும்ப கேட்டார். பணத்தை அவர்கள் திரும்ப கொடுக்கவில்லை. இதையடுத்து வினிஷா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனை சந்தித்து புகார் அளித்தார்.
புகாரில் தனக்கு ரெயில்வேயில் போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கிய சிபு, ஷைனி ஆகிய 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களிடம் இருந்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ஜெயபால் பர்னாதாஸ், சப்–இன்ஸ்பெக்டர் அரி கிருஷ்ணபெருமாள் ஆகியோர் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கணவன்– மனைவி 2 பேரும் பணம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரும் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிபு, ஷைனி ஆகிய 2 பேரையும் இன்று காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் மேலும் சிலரிடம் வேலைவாங்கி தருவதாக லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. சிபு, ஷைனியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating