புகை பிடிப்பதை தவிர்ப்பது எப்படி? புதிய ஆன்டிராய்டு அப்ளிகேஷன் சென்னையில் அறிமுகம்!!
புகையிலை பயன்படுத்துவதும், புகை பிடிப்பதும் மனிதன் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புகையிலை ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெறுகின்றன. பான்பராக் போன்ற புகையிலை பொருட்களை விற்பதற்கு அரசு பல்வேறு தடைகளை விதித்துள்ளது. புகை பிடிப்பதற்கும் கட்டுப்பாடுகள் உள்ளன.
என்றாலும், அதையும் மீறி புகையிலை பொருட்கள் விற்கப்படுகின்றன. புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இதை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து அறிவுரை வழங்கவும், புகையிலை தொடர்பான புகார்களை தெரிவிக்கவும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
இன்றைய காலத்தில் செல்போன் மூலம் எதையும் உடனே தெரிந்து கொள்ளும் வசதி வந்திருக்கிறது. இப்போது புதிய ஆன்டிராய்டு அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து புகையிலை ஒழிப்பு முறைகளை அறிய முடியும். விதிகளை மீறி புகையிலை விற்பனை செய்வோரையும் பயன்படுத்துவோரையும் பற்றிய புகார்களையும் செய்ய முடியும்.
இதன் அறிமுக விழா இன்று சென்னை பிரஸ் கிளப்பில் நடந்தது. சினிமா இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் புதிய ஆன்டிராய்டு அப்ளிகேசனை தமிழ் நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
தேசிய புகையிலை ஒழிப்பு அமைப்பு சார்பில் நடைபெற்ற புதிய ஆன்டிராய்டு அப்ளிகேஷன் அறிமுகம் குறித்து இந்த நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சிரில் அலெக்சாண்டர் கூறியதாவது:–
இதன் மூலம் புகை பிடிப்பதை தவிர்க்கும் முறை குறித்து தகவல்களையும், ஆலோசனைகளையும் குறிப்பிட்ட அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள முடியும். இதற்காக யாருடன் தொடர்பு கொள்வது என்ற விவரங்களை இதில் அறியலாம்.
தடை செய்யப்பட்ட பொது இடங்களில் யாராவது புகை பிடித்தால் அதுபற்றி புகார் செய்யும் வசதி இதில் உள்ளது. இதன் மூலம் புகை பிடிப்பவரை போலீசில் ஒப்படைக்க முடியும். இது தவிர விதிமுறைகளை மீறி சிகரெட், பீடி பிடிப்பவர்கள், அது பற்றி விளம்பரம் செய்வது போன்ற புகார்களையும் தெரிவித்து சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating