கூடங்குளம் அருகே இளம்பெண்–சிறுவன் கொலையில் மர்மம் நீடிப்பு!!
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அடுத்துள்ள விஜயாபதி காடுதுளா அருகே உள்ள உவரி மெயின்ரோட்டில் குழந்தை இயேசு ஆலயம் உள்ளது. நேற்று மாலை இந்த ஆலய வளாகத்தில் ஒரு பெண் மற்றும் சிறுவன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நெல்லை எஸ்.பி.விக்ரமன், வள்ளியூர் டி.எஸ்.பி. பாலாஜி, கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், உவரி இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை பார்வையிட்டனர்.
அப்போது இறந்து கிடந்த பெண் மற்றும் சிறுவனின் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் 2 பேரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் அந்த பெண்ணுக்கு 35 வயதும், சிறுவனுக்கு 10 வயதும் இருக்கும். அவர்களது பெயர், ஊர் விவரம் எதுவும் தெரியவில்லை. போலீசார் 2 பேரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையான பெண் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் அப்படியே கிடந்தது. இதனால் நகைக்காக கொலை செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. அந்த பெண்ணும்– சிறுவனும் தாய்–மகனாக இருக்கலாம் என தெரிகிறது. வெளியூரை சேர்ந்த அந்த பெண்ணை மர்மநபர்கள் கூடங்குளம் பகுதிக்கு கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் குடும்ப தகராறில் அந்த பெண்ணின் கணவரே மனைவியையும், மகனையும் கொலை செய்திருக்கலாமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண், சிறுவன் பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அவர்களை கொலை செய்த நபர்கள் யாரென்றும் தெரியவில்லை. தொடர்ந்து இந்த கொலையில் மர்மம் நீடித்து வருகிறது.
இதனிடையே கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Average Rating