புதுக்கோட்டை அருகே களவாணி சினிமா பட பாணியில் இளம் பெண்ணை கடத்திய கும்பல்!!
கீரனூர் அருகே உள்ள மோசகுடியை சேர்ந்த பழனிவேலு மகள் ராசிகா (வயது 22). இவர் கீரனூர் கடை வீதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை 7.10 மணிக்கு வழக்கம் போல் பஸ்சில் கீரனூருக்கு வந்த ராசிகா பஸ்சில் இருந்து இறங்கி பியூட்டி பார்லருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரது தோழிகள் சிலரும் சென்றனர்.
அப்போது திடீரென அவர்கள் அருகில் ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்த சிலர் கண்இமைக்கும் நேரத்தில் ராசிகாவை காருக்குள் இழுத்து போட்டனர். பின்னர் அந்த கார் திருச்சியை நோக்கி விரைந்தது. இதற்கிடையில் கும்பலில் வந்த ஒரு வாலிபரை மீண்டும் காரில் ஏற்றாமல் அந்த கும்பல் அவசர அவசரமாக சென்று விட்டது. இதனால் அந்த நபர் செய்வதறியாது திகைத்து நின்றார்.
மக்கள் நடமாட்டம் மிக்க கீரனூர் கடை வீதியில் நடந்த இந்த கடத்தல் சம்பவத்தை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கும்பலுடன் வந்து சிக்கி கொண்ட அந்த வாலிபரை பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் அவனை அங்குள்ள ஒரு கடையின் முன்பு கட்டி வைத்து விட்டு கீரனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு விரைந்து வந்த கீரனூர் போலீசார் பொதுமக்களிடம் இருந்து அந்த வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் போலீசாரிடம் கூறியதாவது :–
‘எனது பெயர் ஜெகதீஷ். ஊர் சின்னபாண்டுரார் பட்டி, இதே ஊரை சேர்ந்த தர்மராஜ் (28) எனது நண்பன். தர்மராஜூம் கீரனூர் பியூட்டி பார்லரில் வேலை பார்க்கும் ராசிகாவும் காதலித்து வந்தனர். தர்மராஜூக்கு, ராசிகா முறை பெண். ஆனால் அவர்கள் திருமணத்திற்கு ராசிகா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் களவாணி சினிமாவில் வருவது போல் காரில் பெண்ணை கடத்தி செல்ல தீர்மானித்தோம். நான், தர்மராஜ், சிவா (30) ஆகியோருடன் காரில் வந்து ராசிகாவை கடத்தினோம். ஆனால் பெண்ணை கடத்தும் அவசரத்தில் என்னை விட்டு விட்டு சென்று விட்டனர். நான் மாட்டிக் கொண்டேன். ராசிகாவை கடத்தியவர்கள் எங்கே கொண்டு சென்றனர் என்பது எனக்கு தெரியாது.
இவ்வாறு அவன் பரிதாபமாக போலீசாரிடம் அவன் கூறியுள்ளான்.
இதையடுத்து கீரனூர் போலீசார் தனிப்படை அமைத்து இளம் பெண்ணை கடத்தி சென்றவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். திருச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுத்து கடத்தல் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்று காலையில் கீரனூரில் நடந்த இந்த கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating