முதலமைச்சரின் முன்பாக மணிக்கட்டை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி: குஜராத்தில் பரபரப்பு!!
குஜராத்தில் முதலமைச்சர் கலந்து கொண்ட விழா மேடையில், கை மணிக்கட்டை, பிளேடால் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற மனிதரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அகமதாபாத்தின் பாவ்லா நகரைச் சேர்ந்தவர் மொமாஜி தாகூர், இவர், வேத் என்கிற கிராமத்தில் உள்ள சொந்தநிலம் தொடர்பான சிக்கலால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் அரசு இயந்திரம் இவரது வழக்கு குறித்து நீண்ட காலமாக போதிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் தாகூர் விரக்தியடைந்தார்.
இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினருக்காக வீடு கட்டித்தரும் திட்டத்திற்காக இன்று, சபர்மதி ஆற்றிற்கு முன்பாக நடந்த அடிக்கல் நாட்டு விழாவிற்காக குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் வந்திருந்தார். விழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது விடு விடுவென மேடைக்கு ஓடிய தாகூர் தன் கையில் இருந்த பிளேடால் மணிக்கட்டை கிழித்துக் கொண்டார். இதனால் முதல்வர் மற்றும் மேடையில் இருந்த அதிகாரிகள் உட்பட அனைவரும் பதட்டமடைந்தனர்.
போலீசார் தாகூரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating