திருவனந்தபுரம் அருகே வீட்டு கிணற்றில் வீசப்பட்ட மாந்திரீக பொருட்கள்: பொதுமக்கள் பீதி!!
திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாலு மூடு பகுதியில் உள்ளது ஆழியாறு. இந்த ஊரை சேர்ந்தவர் சிசுபாலன் இவரது வீட்டை ஒட்டி ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகே குங்குமம், மஞ்சள் மற்றும் மலர்கள் தூவப்பட்டு கிடந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிசுபாலன் கிணற்றின் உள்ளே பார்த்தார். அப்போது கிணற்றின் உள்ளே சில பொருட்கள் மிதப்பது தெரியவந்தது. இந்த தகவல் அக்கம் பக்கத்தில் பரவியதால் அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. யாரோ மாந்திரீகம் செய்து தனது கிணற்றுக்குள் பொருட்களை வீசி சென்று இருப்பதாக அவர் கருதினார்.
இதுபற்றி வெஞ்ஞாலு மூடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் மதுசூதனன் தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு நீண்ட கயிறுமூலம் ஒருவரை கிணற்றுக்குள் இறக்கி கிணற்றில் மிதந்த மர்ம பொருளை மேலே கொண்டு வந்தனர்.
பெரிய பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு இருந்த அந்த பொருட்களை போலீசார் எடுத்து பார்த்தபோது அது சிறு சிறு மண்குடங்கள் என்பது தெரியவந்தது. மாந்திரீகம் மற்றும் கோவில் பூஜைகளுக்கு பயன்படுத்துவது போல அந்த மண்குடங்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த குடங்களை யார் வீசி சென்றார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating