கடும் போராட்டத்துக்கு பின்னர் 9 குழந்தைகள் பெற்ற பெண்ணுக்கு குடும்பக்கட்டுப்பாடு!!
திண்டுக்கல் மாவட்டத்தில் 50 சதவீதம் தம்பதியினர் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்து கொள்ளாமல் உள்ளனர். 2–க்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்ற இவர்கள் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்துக்கு வரும்போது கவுன்சிலிங் வழங்கி, குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்து கொள்ள வலியுறுத்தினால் அடுத்த தடவை தனியார் மருத்துவமனை அல்லது வீட்டிலே பிரசவம் பார்த்து விடுகின்றனர்.
இதனால் சமீப காலமாக 9–வது குழந்தை, 10–வது குழந்தைகள் பிறப்பு விகிதம் மாவட்டத்தில் சாதாரண நிகழ்வாகி விட்டது.
இந்நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன், திண்டுக்கல் நாகல்நகர் பாரதி நகரைச் சேர்ந்த அழகர் என்பவரின் மனைவி மேரிக்கு (வயது 34) 9–வது குழந்தை பிறந்தது.
இவர் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசனுக்கு பயந்து அரசு மருத்துவமனைக்கு வராததால் வீட்டிலேயே குழந்தை பிறந்தது. அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன் செய்ய மருத்துவர்கள் முயன்றனர். அதற்கு அவர் மறுத்தார். அவரது கணவரும் சம்மதிக்கவில்லை. இதையடுத்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் ரவிக்கலா ஆலோசனைகளை வழங்கி, அவர்களை சம்மதிக்க வைத்தார். 20 நாள்களுக்குப் பின் மேரிக்கு நேற்று குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது.
Average Rating