தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்று மது பாட்டில் கேட்டு வாலிபர் ரகளை!!
மதுரவாயல் வானகரத்தில் ஒரு மையம் உள்ளது. இன்று காலை 9 மணியளவில் அங்கு குடிபோதையில் ஒரு வாலிபர் நுழைந்தார். அங்கு 50 அடி உயரத்தில் உள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்றார். எனக்கு குவாட்டர் மது பாட்டில் வேண்டும் என்று கூச்சல் போட்டார். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கீழே இறங்கும்படி கெஞ்சினர்.
அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. மதுபாட்டில் வாங்கி கொடுத்தால் தான் இறங்குவேன். இல்லாவிடில் கீழே குதித்து விடுவேன் என்று மிரட்டினார். இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர்.
அவர்களும் அந்த நபரை கீழே இறங்கும்படி வலியுறுத்தினர். இருந்தும் அவர் கேட்கவில்லை. மதுபாட்டில் வாங்கி கொடுத்தால்தான் இறங்குவேன் என ரகளை செய்தார்.
அதை தொடர்ந்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். வானகரம் தீயணைப்பு படை அதிகாரி சண்முகம் தலைமையில் வீரர்கள் வந்தனர். அவர்களும், போலீசாரும் அந்த வாலிபரிடம் நைசாக பேசினர். மது பாட்டில் வாங்கி தருவதாக உறுதி அளித்து அவரை தண்ணீர் தொட்டியில் இருந்து கீழே இறங்கினர்.
விசாரணையில் அவரது பெயர் ஜெயக்குமார் (23) என தெரிய வந்தது. கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த அவரிடம் ஒரு அடையாள அட்டை இருந்தது. அதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் என எழுதப்பட்டிருந்தது. எனவே, அவர் ரேசன் கடை ஊழியராக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
குடிபோதையில் இருந்த அவரை இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் இன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடந்தது. இதனால் சுமார் 1½ மணி நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
Average Rating