தபாலில் வந்ததை உரிமையாளரிடம் ஒப்படைக்காமல் கிரெடிட் கார்டுகளை திருடி நூதன முறையில் பல லட்சம் மோசடி கூரியர் நிறுவன ஊழியர் உள்பட 5 பேர் சிக்கினர்
கொரியர் மூலம் அனுப்பப்பட்ட கிரெடிட் கார்டை உரிமையாளர்களிடம் ஒப்படைக்காமல், நூதன முறையில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கூரியர் நிறுவன ஊழியர் தலைமையிலான கும்பலை போலீசார் பிடித்துள்ளனர்.22 கார்டுகள் அபேஸ் சென்னை சைதாப்பேட்டை கொத்தவால்சாவடி ரோடை சேர்ந்தவர் கணேஷ் (20). இவர், தி.நகரில் உள்ள `எல்பி’ என்ற கூரியர் நிறுவனத்தில் டெலிவரி பாயாக சில மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்தான். வேலைக்கு சேரும்போது பரத் என்ற போலி பெயர் கொடுத்தான் கணேஷ். இந்தநிலையில் கடந்த 22.9.2007-ல், பல்வேறு நிறுவனங்களின் 22 கிரெடிட் கார்டுகளை விண்ணப்பதாரர்களுக்கு டெலிவரி செய்வதற்காக கணேஷிடம் கூரியர் நிறுவனத்தினர் கொடுத்தனர். அவற்றை உரிமையாளர்களிடம் கணேஷ் ஒப்படைக்கவில்லை. ஆனால், உரிமையாளர்களிடம் கொடுத்துவிட்டதுபோல் அவன் போலி கையெழுத்து போட்டு நிறுவனத்திடம் கொடுத்துவிட்டான்.
அதுமட்டுமின்றி, அன்றைய தினமே வேலையை ராஜினாமாவும் செய்து விட்டான். இதைத் தொடர்ந்து, தனது நண்பர்கள் துணை கொண்டு அந்த கிரெடிட் கார்டுகள் மூலம் பல்வேறு கடைகளில் பொருட்களை அவன் வாங்கியுள்ளான். ஆனால், அதற்கான ரசீதோ, கிரெடிட் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அனுப்பப்பட்டன. கிரெடிட் கார்டே கைக்கு கிடைக்காத நிலையில், ரசீது வந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்த அவர்கள், வங்கியில் புகார் செய்தனர்.
காட்டி கொடுத்த முகவரி
இதைத் தொடர்ந்து கூரியர் நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் புகார் செய்தார்கள். அவரது உத்தரவின் பேரில், துணை கமிஷனர் தர்மராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பன்னீர்செல்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மேரிஜு விசாரணை மேற்கொண்டார். இதில், போலி பெயரில் கணேஷ் பணிக்கு சேர்ந்தது தெரியவந்தது. ஆனால், அவன் கொடுத்த ஒரு தொலைபேசி எண் மற்றும் ஒரு நண்பரின் தவறான முகவரியின் ஒரு பகுதி போன்றவற்றின் மூலமாகவும் அவனது நண்பன் அலெக்சாண்டர் சிக்கினான்.
அலெக்சாண்டரின் புகைப்படம் ஒட்டப்பட்ட டிரைவிங் லைசென்சையே கணேஷ் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அலெக்சாண்டர் (21) மூலமாக கணேஷையும், அவனது கூட்டாளிகள் கார்த்திகேயன் (20), கோவிந்தராஜ் (30) மற்றும் வீரபத்திரன் (20) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கலர் டி.வி, 5 பவுன் தங்கநகைகள் மற்றும் 2 செல்போன்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நூதன முறையில் மோசடி செய்த இந்த கும்பலை போலீசார் சிறையில் அடைத்தனர்.