கடனை திருப்பி செலுத்த முடியாததால் கர்நாடகாவில் 3 விவசாயிகள் தற்கொலை!!
மழையும் பொய்த்தது, வெயிலும் சுட்டெரிக்கின்றது என்று நாடு முழுவதும் விவசாயிகள் புலம்பிவருவது அனைவருக்கும் தெரிந்தது தான். இதன் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் கர்நாடகாவில் 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அம்மாநிலத்தின் மாண்டியா, மைசூரு மற்றும் ஹசன் மாவட்டங்களில் தலா ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மைசூரு மாவட்டத்தின், பெரியபட்ணா தாலுகாவுக்குட்பட்ட பெட்டடபுரா கிராமத்தை சேர்ந்த 50 வயது கரிகௌடா என்பவர், கடன் வாங்கிய 3 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அதே போல் மாண்டியா மாவட்டத்தின், கே. ஆர். பேட் தாலுகாவுக்குட்பட்ட ஹிரிகலாலே கிராமத்தை சேர்ந்த 45 வயது சங்கரகவுடா என்பவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அவரது மனைவி ஜெயம்மா கூறுகையில், கடந்த நான்கு மாதத்திற்கு முன் 1 லட்ச ரூபாய் கடன் வாங்கிய எனது கணவர், எங்களுக்கு சொந்தமான நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார். ஆனால் அதிகளவு ஆழம் தோண்டப்பட்டும் அதில் தண்ணீர் கிடைக்கவில்லை. இந்த வேதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றார்.
இதே போல் ஹசன் மாவட்டத்தின், சென்னராயப்பட்னா தாலுகாவில் வசிக்கும் 66 வயது கிருஷ்ணப்பா என்பவரும், தான் வாங்கிய 5 லட்ச ரூபாய் கடனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது அம்மாநில விவசாயிகள் மத்தியில் பெரும் கவலைகளை தோற்றுவித்துள்ளது. இதை உடனடியாக தடுக்க வேண்டியது அரசின் கடமை என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Average Rating