தாமதமாக குழந்தை பெறுபவர்கள் சிறந்த தாய்
தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்கள், இளம் தாய்மார்களைவிட சிறந்த தாயாக இருப்பார்கள் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இது குறித்து லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் எலிசபெத் கிரிகோரி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: பெண்கள் 30 வயது வரை குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தவிர்த்து அதன்பின் குழந்தை பெற்றுக் கொண்டால், அவர்கள் சிறந்த தாயாக இருக்கின்றனர். இதற்கு காரணம், இளம் தாய்மார்களைவிட, முதிர்ச்சி அடைந்த பெண்கள், பொருளாதார ரீதியில் பாதுகாப்பு நிலையை அடைந்து விடுகின்றனர். அதேபோல், கணவரிடம் நல்ல புரிந்துணர்வு ஏற்படுகிறது. அவர்களின் உடல்நலமும் நல்ல நிலையில் இருக்கிறது. 30 வயது வாக்கில் குழந்தை பெறும் பெண்கள், நினைத்தால் தங்களுடைய வேலையை பிரசவ காலம் வரையில் ஒதுக்கிவைத்துவிட்டு பின்னர் அதை தொடரக்கூட முடிகிறது. ஏனெனில், இளம் வயதிலேயே இவர்கள் தங்கள் லட்சியங்களை பணி மூலம் அடைந்து விடுகின்றனர். இங்கிலாந்தில் இப்போது 29 வயதுக்கு மேல் குழந்தை பெறும் பெண்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் மேற்கூறிய காரணங்கள். முதிர்ச்சி அடைந்த தாயாரால் குழந்தைகளுக்கு நல்ல அறிவு, செழிப்பான வாழ்க்கை ஆகியவை கிடைக்கிறது. தாயிடம் இருந்து முழு அன்பும் கிடைக்கிறது.
இளம் பெண்கள் குழந்தைபேறுக்கு மிக தகுதியானவர்கள் என்றாலும், அவர்கள் நாகரீக வாழ்க்கையில் பணி ரீதியில் பெரும் மன அழுத்தம், கணவருடன் முழு புரிந்துணர்வு ஏற்படும் முன்னரே குழந்தை பேறு உருவாவதால் அதை பார்த்து கொள்வதில் சண்டைகள் போன்ற பல சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் தான் முதிர்ச்சியான தாய்களால் குழந்தைகளை சிறப்பாக பார்த்து கொள்ள முடிகிறது. இவ்வாறு எலிசபெத் கிரிகோரி கூறினார்.