ஸ்ரீரங்கத்தில் வரதட்சணை கொடுமையால் ஆசிரியர் மனைவி தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை!!
சென்னை பேரூரை சேர்ந்தவர் செல்வகணபதி. யோகா ஆசிரியர். இவரது மனைவி ராஜலெட்சுமி (வயது 28). இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன் – மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் ராஜலெட்சுமியை ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் கொண்டு செல்வ கணபதி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விட்டு சென்றார்.
இந்நிலையில் நேற்று ராஜலெட்சுமி துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் கபிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ராஜலெட்சுமியின் தாய் ஞானசவுந்தரி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் செல்வ கணபதி தனது மகளிடம் ரூ. 10 லட்சம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக கூறியிருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ராஜலெட்சுமிக்கு திருமணமாகி 3 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. கணேசசேகரன் இன்று விசாரணை நடத்த உள்ளார்.
Average Rating