10 கிலோ தங்கம் கடத்தி வந்த அயர்லாந்து நாட்டுக்காரர் கொச்சியில் கைது!!
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் 10 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்த அயர்லாந்து நாட்டுக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து தங்கம் பெரிய அளவில் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சோதனையின்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், துபாயில் இருந்து கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உஷாரான சுங்கத்துறை அதிகாரிகள், துபாய் எமிரேட்ஸ் விமானம் நேற்று இரவு கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அதில் வந்த பயணிகளின் உடமைகளை தீவிரமாக பரிசோதனை செய்தனர்.
அப்போது, மிடுக்காக நடந்து வந்த ஒருவர் மீது சந்தேகப்பட்ட சுங்கத்துறையினர், அவரது உடமைகளை மட்டுமின்றி உடல் முழுவதும் சோதனை செய்தனர். அப்போது அவர் அணிந்திருந்த ‘ஜர்க்கின்’ ஆடையினுள் தலா ஒரு கிலோ எடையுள்ள 10 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பிடிப்பட்ட நபர் அயர்லாந்து நாட்டை சேர்ந்த ஆண்ட்ரு என்பது தெரிய வந்தது. கேரளாவை சேர்ந்த தங்கக்கடத்தல் பெரும் புள்ளிகள் இவரை கூலிக்கு தங்கம் கடத்தும் ஏஜெண்டாக பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
Average Rating