விழுப்புரம் அருகே இரும்பு கம்பியால் அடித்து பெண் கொலை: கணவன் – மனைவி கைது!!
விழுப்புரத்தை அடுத்த நேமூர் காலனியை சேர்ந்தவர் மைக்கேல். இவரது மகன் ஆனந்த் (வயது 27). அதே பகுதியில் வசிப்பவர் துரை (36).
ஆனந்தும், துரையும் சேர்ந்து மாட்டிறைச்சி வெட்டும் தொழில் செய்து வந்தனர். திடீரென துரையை விட்டு பிரிந்து ஆனந்த் வேறு இடத்துக்கு வேலைக்கு சென்றார். ஆனந்தை திரும்ப வருமாறு துரை அழைத்த போது அவர் மறுத்துவிட்டார்.
இதனால் 2 பேருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. எனினும் நேற்று காலையில் மீண்டும் தன்னுடன் சேர்ந்து தொழில் செய்ய வருமாறு ஆனந்திடம் துரை கேட்டார். அப்போதும் ஆனந்த் சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று இரவு துரையின் தங்கையிடம் ஆனந்த் பேசிக்கொண்டிருந்தார். அதனை கண்ட துரை ஆத்திரம் அடைந்து அவரிடம் தகராறு செய்தார். மேலும் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் ஆனந்தை தாக்கினார்.
அதனை கண்ட ஆனந்தின் அத்தை ராகினி (70) ஓடி வந்து தடுக்க முயன்றார். உடனே துரையும், அவரது மனைவி பரிமளாவும் (30) சேர்ந்து ராகினியையும், ஆனந்தையும் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார்கள். இதில், ஆனந்தும், ராகினியும் படுகாயமடைந்தனர். அவர்கள் 2 பேரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ராகினி பரிதாபமாக இறந்தார்.
அவரது உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. ஆனந்த் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ராகினி கொலை தொடர்பாக கஞ்சனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், சப்–இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் கஞ்சனூருக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கொலை குறித்து வழக்கு பதிவு செய்து துரை, அவரது மனைவி பரிமளாவை கைது செய்தனர்.
மருமகனை தாக்க முயன்றதை தடுக்க முயன்ற மூதாட்டி இரும்பு கம்பியால் சரமாரி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating