சம்பளஉயர்வு கோரி: துபாயில் போராட்டம் நடத்திய 90 இந்தியர்கள் மீது வழக்கு பதிவு
சம்பள உயர்வு கோரி துபாயில் போராட்டம் நடத்திய 90 இந்தியர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள ஒரு கட்டுமான கம்பெனியில் வேலை செய்யும் 4ஆயிரம் தொழிலாளர்கள் சம்பளஉயர்வு, தங்குமிடத்தில் போதுமான வசதிகள் ஆகியவை கோரி கடந்த சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். எஞ்சியவர்கள் பாகிஸ்தானியர்கள், வங்காளதேசத்தினர் ஆவார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அவர்களை தொழிலாளர்கள் தாக்கினார்கள். போலீஸ் வாகனத்துக்கும் சேதம் ஏற்படுத்தினார்கள். இதை தொடர்ந்து 4 ஆயிரம் தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையில் இந்திய தூதரகம் அவர்களை விடுவிப்பதற்காக சமரச முயற்சிகளில் ஈடுபட்டது. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆயிரம் தொழிலாளர்களையும் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்புவது இல்லை என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு தீர்மானித்து உள்ளது.
90 இந்தியர்கள் மீது வழக்கு
பெரும்பாலான தொழிலாளர்கள் கம்பெனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி நடப்போம் என்றும், வன்முறைகளில் ஈடுபடமாட்டோம் என்றும் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டனர். இதை தொடர்ந்து அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள்.
வன்முறையில் ஈடுபட்டதாக 159 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 90 பேர் இந்தியர்கள். அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பது கோர்ட்டில் நிரூபணமானால் அவர்கள் தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறைக்கு சென்று பார்வையிட்டார்
இதற்கிடையில் இந்திய தூதர் முபாரக் ஜெயிலுக்கு சென்று அங்கு அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் இந்தியர்களை பார்த்து பேசினார். இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வேலைநிறுத்தம், தொழிற்சங்கம் போன்றவை தடை செய்யப்பட்டவை ஆகும். இந்த நிலையில் அந்த கட்டுமானக்கம்பெனியில் வேலை செய்யும் 2 ஆயிரம் தொழிலாளர்கள் நேற்று 4-வது நாளாக வேலைக்கு செல்லவில்லை. உடனடியாக சம்பளம் உயர்த்தப்படவேண்டும் என்று கோரி அவர்கள் வேலையை புறக்கணித்தனர்.