எச்.ஐ.வி. பாதித்த சிறுவன் – சிறுமிக்கு வாழ்வளித்த அப்துல் கலாம்!!
ஒடிசாவில் எச்.ஐ.வி. பாதித்த சிறுவன்-சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய அப்துல் கலாமுக்கு தற்போது அவர்களின் மூத்த சகோதரி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி உள்ளார்.
ஒடிசா மாநிலம், கேந்திரபிரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மீனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது சகோதரனும் சகோதரியும் சிறுவயதிலேயே எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள். பெற்றோர் மறைந்த நிலையில் அனாதையாக்கப்பட்ட மீனா எச்.ஐ.வி. பாதித்த சகோதரியையும், சகோதரனையும் காப்பாற்ற வழிதெரியாமல் நிற்கதியாய் நின்றார். அப்போது அவருக்கு வயது 11.
தனது உடன்பிறந்தவர்களையும் காப்பாற்ற உதவுமாறு அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு மீனா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். கலாமுக்கு கடிதம் எழுதியதை மறந்து அங்கும் இங்கும் வேலை செய்து கொண்டு தனது உடன்பிறப்புகளை கஷ்டப்பட்டு மீனா பராமரித்து வந்தார்.
திடீரென, ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீனாவுக்கு ஒரு கடிதம் வந்தது. மீனாவின் கருணைக் கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்த ஜனாதிபதி அப்துல் கலாம் அனுப்பியிருந்த அக்கடிதத்துடன் 20 ஆயிரம் ரூபாய்க்கான வரைவோலையும் இணைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஒடிசா மாநில அரசின் சார்பிலும் மீனாவுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
தற்போது அப்துல் கலாம் அமரராகி விட்ட பிறகு, ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு பிறகு மேற்கண்ட சுவாரஸ்யமான அந்த நினைவலையை நிருபர்களிடம் மீனா பகிர்ந்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “அப்துல் கலாம் எனக்கு ஒரு பாதுகாவலர். அன்று அவர் எனக்கு செய்த பண உதவி தான் இன்று வரை என் இரு உடன் பிறந்தவர்கள் உயிருடன் இருக்க காரணம். அதற்காக நான் அவருக்கு(கலாமுக்கு) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவு என்னால் தாங்கிக் கொள்ள முடியாத பெருந்துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. எனது குடும்பத்தில் ஒருவர் மறைந்ததைப் போலவே நான் உணருகின்றேன்”. என்றார்
வாழும் போதும் வாழ்ந்ததற்கு பிறகும் அனைவரது வாழ்விலும் ஒளியேற்றிய அப்துல் கலாம் நம் அனைவரிடையே தற்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
Average Rating