சசிபெருமாள் மரணத்தைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் மேலும் 2 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டம்!!
கன்னியாகுமரி அருகே உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி போராடிய காந்தியவாதி சசிபெருமாள், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், மதுவிலக்கு அறிவிப்பை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
சசிபெருமாளின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ள நிலையில், கன்னியாகுமரியில் மேலும் ஒரு இடத்தில் போராட்டக்காரர்கள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜஸ்டின் சுதாகர், ராஜ்குமார் ஆகியோர் ஒழுகினசேரியில் உள்ள செல்போன் டவரில் ஏறி மதுஒழிப்பு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டி வரும் அவர்களை மீட்கும் முயற்சியில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.
செல்போன் டவரில் ஏறி அவர்களுடன் சமாதானம் பேசும் அதேசமயம், செல்போன் டவரைச் சுற்றி வலைகள் கட்டி அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மதுஒழிப்பு போராட்டக்காரர்கள் செல்போன் டவர்களை குறிவைத்து போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளதால் செல்போன் டவர்களைச் சுற்றி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
Average Rating