கரூரில் காதல் காசுகளால் பரபரப்பு
கரூரில் புழக்கத்தில் உலவும் காதல் காசுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கரூரில் கடந்த சில நாட்களாக புதுவித நாணயம் உலா வந்து கொண்டுள்ளது. ஐந்து ரூபாய் நாணய வடிவில் இருக்கும் அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் இதயத்தின் நடுவில் அம்பு பாய்ந்தது போலவும், லவ் என்ற வாசகமும் உள்ளது.மறு பக்கத்தில் அதே போல் இதயம், அம்பு மற்றும் பெஸ்ட் பிரண்ட்ஸ் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மத்தியில்தான் இது அதிகம் புழக்கத்தில் உள்ளது. காதலை தெரிவிக்க இந்த நாணயங்களை இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.காதல் நாணயத்தை சுண்டிப் போட்டு லவ் என்று வந்தால் காதலிப்பது என்றும், பெஸ்ட் பிரண்ட்ஸ் என்று வந்தால் நண்பர்களாக தொடர்வது என்றும் தீர்மானிக்கிறார்களாம்.காதலர்களைத் தீர்மானிக்கும் இந்த நாணயங்கள் தடம் மாறி பொதுமக்களிடமும் புழக்கத்திற்கு வந்துள்ளது. இதனால் பல பாதிப்புகள் ஏற்படுகிறதாம். குறிப்பாக பஸ் கண்டக்டர்களுக்குத்தான் சிக்கல் அதிகமாம்.
பஸ் டிக்கெட் எடுக்க காசு கொடுப்பவர்கள், நைஸாக இந்த காதல் நாணயத்தை ஐந்து ரூபாய் என்று தள்ளி விட்டு விடுகிறார்களாம். அதேபோல டீக் கடைகளிலும் கூட இந்த நாணயங்கள் தள்ளி விடப்படுகிறதாம்.
இதனால் தங்களுக்கு பண இழப்பு ஏற்படுவதாக இரு தரப்பும் புலம்ப ஆரம்பித்துள்ளது.
காதலர்களே, காதலில் நாணயம் வேண்டும், இந்த ‘நாணயத்தால்’ அந்த ‘நாணயம்’ கெட்டு விடாமல் பார்த்துக் கொண்டால் நல்லது.