தீபாவளியை கவுரவப்படுத்தி அமெரிக்க எம்.பிக்கள் தீர்மானம்!!
அமெரிக்க பார்லிமென்ட்டின் பிரதிநிதிகள் சபையில், தீபாவளி பண்டிகையை கவுரவப்படுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு, அமெரிக்க பார்லிமென்ட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது மிக அரிதான விஷயமாகும். அதன் 747வது தீர்மானமாக தீபாவளி பண்டிகையின், மதரீதியான மற்றும் சரித்திர பூர்வமான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், கொண்டு வரப்பட்டதற்கு 358 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து ஓட்டளித்தனர். எதிர்த்து யாரும் ஓட்டு போடவில்லை. 66 எம்.பி.,க்கள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. தென் கரோலினாவில் குடியரசு கட்சியை சேர்ந்த ஜோயி வில்தான் உட்பட சிலர் தான் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தவர்கள். இது குறித்து ஜோயி வில்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தீபாவளி பண்டிகையின் மதரீதியான மற்றும் சரித்திரபூர்வமான முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை கண்டு நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அமெரிக்காவில் வாழும் 20 லட்சம் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின் சமூகத்தினர், இந்த பண்டிகையை 5 நாள் விழாவாக கொண்டாடுகின்றனர். அமெரிக்காவில் வாழும் குடிபெயர்ந்த மக்களில் முக்கியமானவர்களாக கருதப்படுபவர்கள் அமெரிக்க வாழ் இந்தியர்கள். அவர்களின் முக்கியத்துவத்துக்கு தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது’ என்றார்.