கள்ளக்காதலி, மகளை வெட்டி, துண்டுத்துண்டாக சூட்கேஸ்களில் அடைத்து, ஆற்றில் வீசிய வங்கி மானேஜர் பிடிபட்டார்!!
மேற்கு வங்காளம் மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சியோராபுலி நகரின் அருகே பாயும் ஹூக்ளி ஆற்றில் சென்றுகொண்டிருந்த ஒரு படகில் இருந்து ஒருவர் சூட்கேஸ்களை தூக்கி ஆற்றுநீரில் போட்டுக் கொண்டிருப்பதை கண்டு சந்தேகப்பட்ட சிலர் அவரை மடக்கிப் பிடித்தனர்.
ஆற்றுக்குள் எதற்கு சூட்கேஸ்களை தூக்கிப் போடுகிறீர்கள்? என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், துர்காபூர் பகுதியில் இருக்கும் அரசு வங்கியொன்றில் மானேஜராக பணியாற்றும் அடையாள அட்டையை காட்டிய அந்த நபர், பழைய வங்கி ஆவணங்களை அழிப்பதற்காக அவற்றை சூட்கேசில் எடுத்துவந்து ஆற்றில் வீசுவதாக கூறினார்.
இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த அவர்கள் உடனடியாக சியோராபுலி புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதற்குள் படகு கரையை வந்து சேர்ந்ததும் தயாராக காத்திருந்த போலீசார், சந்தேகத்துக்குரிய அந்நபரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது.
வடக்கு 24-வது பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த சமரேஷ் சர்க்கார்(45) என்னும் அந்நபர், புர்த்வான் மாவட்டத்தில் உள்ள துர்காபூர் அருகே இருக்கும் மம்ராபஜார் பகுதியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் மேனேஜராக பணியில் சேர்ந்துள்ளார்.
திருமணமாகி இரண்டு மகள்களுக்கு தந்தையான இவரது குடும்பம் வடக்கு 24-வது பர்கானா மாவட்டத்தில் உள்ள டிட்டாகர் பகுதியில் வசித்து வரும் நிலையில், துர்காபூரில் தனியாக தங்கியபடி சமரேஷ் சர்க்கார் பணிக்கு சென்றுவந்துள்ளார்.
அவர் பணியாற்றும் வங்கியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவனை பிரிந்து ஐந்து வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணுடன் சாதாரணமாக தொடங்கிய பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக உருவெடுத்தது.
வங்கியில் வேலை, கைநிறைய சம்பளம், வசதியான வாழ்க்கை என வலம்வரும் சமரேஷ் சர்க்காரை நிரந்தரமாக சொந்தமாக்கிக் கொள்ளும் ஆசையில் தன்னை சட்டபூர்வமான மனைவியாக ஏற்றுக் கொள்ளும்படி அந்தப் பெண் வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முந்தினம் (வெள்ளிக்கிழமை) உடல்நலம் சரியில்லை என்று கூறிவிட்டு பிற்பகலில் வங்கியில் இருந்து புறப்பட்ட சமரேஷ் சர்க்கார் நேராக அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போதும், திருமணம் செய்துகொள்வது தொடர்பாக அவருடன் அந்தப் பெண் தகராறு செய்துள்ளார்.
இதில் வெறுப்படைந்த சமரேஷ் சர்க்கார், வீட்டில் கிடந்த வெட்டுக்கத்தியால் அந்தப் பெண்ணை வெட்டிக் கொன்றார். இந்த கொலையை நேரில் பார்த்துவிட்ட சாட்சியான அந்தப் பெண்ணின் ஐந்து வயது மகளையும் துடிதுடிக்க வெட்டிக் கொன்றார்.
பின்னர், இருவரது உடல்களையும் துண்டுத்துடாக அறுத்து, நான்கு சூட்கேஸ்களுக்குள் போட்டு அடைத்து, துர்காபூரில் இருந்து அந்த சூட்கேஸ்களுடன் நேற்று காலை ரெயில் ஏறி லிலுவா என்ற பகுதியை வந்தடைந்தார். லிலுவாவில் இருந்து வேறொரு ரெயிலை பிடித்து, சியோராபுலிக்கு வந்த அவர், அங்கிருந்து ஒரு படகில் ஏறி, ஹூக்ளி ஆற்றை கடந்து பராக்பூர் என்ற இடத்துக்கு சென்று இறங்கினார்.
படகை விட்டு இறங்கி சூட்கேஸ்களை இழுத்துச் சென்றபோது, ஒரு டிராலி சூட்கேசின் கைப்பிடி, உள்ளே இருந்த ‘சுமை’யின் கனம் தாங்காமல் முறிந்துப் போனது. இப்படியே நகருக்குள் சென்றால் மாட்டிக் கொள்வோம் என பயந்த அவர், மீண்டும் அதே படகில் ஏறி சியோராபுலிக்கு திரும்பிச் செல்ல திட்டமிட்டார்.
ஹூக்ளி ஆற்றின் மீது அந்தப் படகு சென்று கொண்டிருந்தபோது, ‘இன்னும் எத்தனை ஊர்களுக்குத்தான் இந்தப் பிணங்களை இழுத்துக் கொண்டு அலைவது’ என்று யோசித்துப் பார்த்த சமரேஷ் சர்க்கார், கையில் இருந்த சூட்கேஸ்களை ஆற்றுக்குள் தூக்கி வீசிவிட்டு, இந்த கொலைகளையும், கொலைக்கான தடயத்தையும் மறைத்துவிட நினைத்தார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதே படகில் வந்த பயணிகள் அவரது செயலுக்கு விளக்கம் கேட்டபோது, அவர் ஒன்றுகிடக்க ஒன்று உளறித்தொலைக்க இப்போது சமரேஷ் சர்க்கார் போலீஸ் லாக்அப்பில் கம்பி எண்ணும்படி ஆகிவிட்டது.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட இரண்டு சூட்கேஸ்களை போலீசார் மீட்டுள்ளனர். மேலும் இரு சூட்கேஸ்களை தேடும் பணி நடைபெற்று வருகின்றது. கொல்லப்பட்ட அவரது கள்ளக்காதலியின் தலை அந்த இரு சூட்கேஸ்களில் ஒன்றில் உள்ளதால், இந்த கொலை வழக்கின் முக்கிய தடயமான அந்தப் பெண்ணின் தலையை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சியோராபுலி போலீசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating