அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழில்ஆர்ப்பாட்டம்!!
சர்வதேச கைதிகள் தினத்தினை முன்னிட்டு இன்று சனிக்கிழமை யாழ். நகரப்பகுதியில் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாண சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில், நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் பிள்கைள், அரசியல்வாதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் யாழ். மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு, ஆஸ்பத்திரி வீதி வழியாக யாழ். கஸ்தூரியார் வீதியை சென்றடைந்து அங்கிருந்து, மின்சார நிலைய வீதி வழியாக மத்திய பஸ் நிலையத்தில் சுமார் 1 மணித்தியாலயங்கள் நடைபெற்றது.
அந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தேசிய அரசாங்கமே சிறைகளில் வாடும் எமது அரசியல் கைதிகளை விடுதலை செய், அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பளித்து அரசியல் கைதிகளை விடுதலை செய் ஜனநாயக அரசே போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை தாங்கியவாறு அரசியல் கைதிகளின் பிள்ளைகள் மற்றும், உறவுகள் கண்ணீர் விட்டு கதறி அழுது தமது ஏக்கங்களையும், வேதனைகளையும் தெரிவித்தனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில், புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்தன் மற்றும், வடமாகாண சபை விவசாய மற்றும் கால் நடை கூட்டுறவு அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், ஆர்னோல்ட், பரம்சோதி, சுகிர்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Average Rating