மாடியில் இருந்து விழுந்து தலை சிதறிய வாலிபருக்கு செயற்கை மண்டை ஓடு: ஐதராபாத் டாக்டர்கள் சாதனை…!!
ஐதராபாத் கோல் கொண்டா பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 25). ஏர்கண்டிஷன் மெக்கானிக்கான இவர் 2 ஆண்டுக்கு முன்பு மாடியில் நின்று வேலை பார்த்துக்கொண்டு இருந்த போது தவறி கீழே விழுந்தார். இதில் தலை சிதறியது. மண்டை ஓடு 2 ஆக பிளந்தது.
ஐதராபாத் ஜிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். 15 நாள் கோமா நிலையில் இருந்து தீபக் மீண்டார். ஆனாலும் அவருக்கு அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்பட்டது. சரியாக பேச முடியாமல் போனது. மேலும் கை, கால்கள் சரியாக செயல்படவில்லை. அவரது மண்டை ஓடு சிதறி போனதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் அறிந்தனர்.
தீபக்குக்கு செயற்கை மண்டை ஓடு பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதன்படி தொழில்நுட்ப வசதியுடன் குறைந்த எடையில் அதே நேரத்தில் வலுவான செயற்கை மண்டை ஓடு சுவிட்சர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. சாலி, இதய், ஈதர், கீயோன், பீக் போன்ற உலோகங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த மண்டை ஓடு மனித உடலோடு ஒன்றி செயல்படும் திறன் கொண்டது.
இந்த செயற்கை மண்டை ஓட்டை ஜிம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தீபக்குக்கு பொருத்தி ஆபரேஷன் செய்தனர். 12 மணி நேரம் நடக்க வேண்டிய அறுவை சிகிச்சையை நவீன தொழில் நுட்ப வசதியுடன் 30 நிமிடத்தில் டாக்டர்கள் செய்து சாதனை படைத்தனர்.
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு தீபக் பழைய நிலையை அடைந்து உள்ளார். நன்றாக பேச, நடக்க முடிகிறது.
வாலிபருக்கு செயற்கை மண்டை ஓடு பொருந்தும் ஆபரேஷன் இந்தியாவிலேயே ஜிம்ஸ் ஆஸ்பத்திரியில்தான் நடந்து உள்ளது என்று மருத்துவமனை நியூராலஜி பிரிவு தலைவர் விஜய சாரதி கூறினார்.
அறுவை சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் செலவானது என்றும் அதனை தெலுங்கானா அரசே ஏற்றுக்கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.
Average Rating