தாம்பரத்தில் தீவிபத்து
தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் வளாகத்தில் உள்ள அழகுசாதன பொருட்கள் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. போராடி தீ அணைக்கப்பட்டது. இதில் லட்சக் கணாக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது. தாம்பரம் சானடோரியத்தில் “மெப்ஸ் என்று சொல்லப்படும் சென்னை ஏற்றுமதி செயல்பாட்டு மையம்’ செயல்பட்டு வருகிறது. இங்கு அழகுசாதனப் பொருட்களை தாயரிக்கும் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கம்பெனியின் ஒரு பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்ட காவலாளிகள் தீயை அணைக்க கடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ரசாயன பொருட்கள் இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனை தொடர்ந்து அவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தாம்பரம், குரோம்பேட்டை, அசோக் நகர், கிண்டி, எழும்பூர், திருவல்லிக் கேணி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து மொத்தம் 13 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
மண்டல நிலைய அதிகாரி விஜய்சாகர் தலைமையில் கோட்ட அதிகாரிகள் விஜயகுமார், மீனாட்சி, பார்த்திபன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 மணி நேரம் தீயை அணைக்க போராடினர். இந்த முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் ஏராளமான அழகுசாதனப் பொருட்கள், ரசயானப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
பரபரப்பான தொழிற்பேட்டை பகுதியில் ஏற்பட்ட இந்த தீவிபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நள்ளிரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் எவ்வித உயிர்சேதமும் ஏற்பட வில்லை. மின்சார கோளாறு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.