தீபாவளிக்கு 15 கோடி எஸ்.எம்.எஸ்., வாழ்த்து : கோடிகளை குவித்த மொபைல் நிறுவனங்கள்
எஸ்.எம்.எஸ்., என்னும் மொபைல் போன் குறுஞ்செய்தி மூலம் டில்லியில் 15 ஆயிரம் தீபாவளி வாழ்த்து அனுப்பியதில் கோடிக்கணக்கான பணத்தை மொபைல் நிறுவனங்கள் அள்ளிவிட்டன. தீபாவளியன்று வாழ்த்து தெரிவிப்பது பாரம்பரியமாக நடந்து வருகிறது. தபால் மூலம் அனுப்பப்பட்டு வந்த வாழ்த்துச்செய்திகள், இன்டர் நெட் வளர்ந்த போது அதில் வலை விரித்தன. வாழ்த்து அனுப்புவதற்காக தனி இணைய தளங்களும் துவங்கப் பட்டன. இப்போது வாழ்த்துச் செய்தி அனுப்புவது மிகவும் எளிமையாகிவிட்டது. இருந்த இடத்தில் இருந்தே மொபைல் குறுஞ்செய்தி மூலம் வாழ்த்து அனுப்புவது அதிகரித்து வரு கிறது. வாழ்த்து அனுப்பியதால் எஸ்.எம்.எஸ்.,பெற்றவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள் என்பதை விட, மொபைல் போன் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தை குவித்துவிட்டன. சூப்பர் தீபாவளியாக கொண்டாடி கோடிக்கணக்கில் பணம் பார்த்துள்ளன. டில்லியில் மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஒரு கோடி. தீபாவளியன்று மட்டும் டில்லியில், 15 கோடிக்கும் அதிகமாக எஸ்.எம்.எஸ்., வாழ்த்துச் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.டில்லியில் பண்டிகைகளின் போது குறுஞ்செய்தி மூலம் வாழ்த்துச் சொல்வது அதிகரித்து வருகிறது. போனில் பேசிக் கொள்வதை விட, எஸ்.எம்.எஸ்., மூலம் பரிமாறிக்கொள்ளவே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பேசுவதைவிட, குறைந்த செலவில் மனதை வெளிப்படுத்தி விடலாம் என்று நம்பிக்கை டில்லிவாசிகளிடம் அதிகரித்து வருகிறது. வாழ்த்து செய்திகளால் தீபாவளியன்று டில்லியில் நெட்வொர்க் பிரச்னையும் ஏற்பட்டது. இதை முன்பே அறிந்து பலர் தீபாவளிக்கு முந்தைய நாளே குறுஞ்செய்தி வாழ்த்துக்களை அனுப்பிவிட்டனர் என்கிறது ஒரு மொபைல் நிறுவனம். முந்தைய நாட்களில் அனுப்பிய குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை பட்டியலில் வரவில்லை. 15 கோடி எண்ணிக்கை என்பது தனியார் மொபைல் சேவை வாடிக்கையாளர்களின் குறுஞ்செய்தி தான். பி.எஸ்.என்.எல்., மூலம் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளின் எண்ணிக்கையை கணக்கிட முடியவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மொபைல் குறுஞ்செய்தி வாழ்த்துக்களால் மொபைல் நிறுவனங்கள், எக்கச்சக்கமாக காசு பார்த்து ஆனந்தமாக தீபாவளியைக் கொண்டாடின.