மணலியில் சாவிலும் இணை பிரியாத தம்பதி: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு…!!
மணலி, அண்ணாதெரு 3–வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் சுந்தரம். (வயது 65). அதே பகுதியில் டெய்லர் கடை வைத்து இருந்தார். இவரது மனைவி பாப்பா (வயது 60).
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி வெவ்வேறு இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக பாப்பாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அவரை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்து இருந்தனர். நேற்று மாலை சுந்தரம், ஆஸ்பத்திரியில் மனைவியை பார்த்து விட்டு பூந்தமல்லியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார்.
அப்போது மனைவியின் நிலை குறித்து அவர் மகள் மற்றும் உறவினர்களிடம் வருத்தத்துடன் தெரிவித்தார். சுந்தரத்திற்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் மன வேதனையில் இருந்த சுந்தரம் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது சுந்தரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து இறுதிசடங்கு செய்வதற்கு சுந்தரத்தின் உடலை மணலியில் உள்ள வீட்டிற்கு உறவினர்கள் கொண்டு வந்தனர்.
இதுபற்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பாப்பாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. கதறி துடித்த அவர் இன்று காலை வீட்டில் இருந்த கணவர் சுந்தரத்தின் உடலை பார்த்து கண்ணீர் விட்டார்.
சிறிது நேரத்தில் பாப்பாவும் அங்கேயே மயங்கி விழுந்தார். டாக்டர்கள் பரிசோதித்தபோது மாரடைப்பால் அவர் இறந்து விட்டது தெரிந்தது.
கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating