விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் டி.ஜி.பி. எச்சரிக்கை
விடுதலைப் புலிகள் உட்பட தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சென்னையில் பேரணி நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதன்பின், தமிழ்ச்செல்வன் கொலைக்கு கண்டனம் தெரிவித்து சில அமைப்புகள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதற்கு மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி உட்பட காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், உள்ளிருப்புக் கூட்டங்கள், பட்டிமன்றங்கள், இரங்கல் கூட்டங்கள் நடத்துபவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள், உருவப் பொம்மைகள் எரித்தல், சாலை மறியல் செய்தல் போன்ற போராட்டங்களில் ஈடுபடும் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தல், சுவர் விளம்பரங்கள் செய்தல், கண்காட்சி நடத்துதல் மற்றும் எவ்வித ஆதரவு செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது. மீறி நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்படி சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிடும் அச்சக உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பொது இடங்களில் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களின் உருவப் பொம்மைகளை எரிப்பது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் டிஜிபி குறிப்பிட்டுள்ளார்.