துருக்கி அருகே அகதிகள் சென்ற படகு கடலில் மூழ்கி 6 குழந்தைகள் பலி…!!
உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று வருகின்றனர். அவர்கள் ரப்பர் மற்றும் மரப்படகுகளில் கள்ளத்தனமாகவும் பாதுகாப்பற்ற முறையிலும் பயணம் செய்து, துருக்கி வழியாக கிரீஸ் சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு மேற்கொள்ளப்படும் பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் துருக்கியின் ஏஜியன் கடல் பகுதியில் இருந்து ஆப்கானிஸ்தான் அகதிகள் 18 சிறுவர்கள் உள்பட 65 பேர் ரப்பர் படகு ஒன்றில் கிரீஸ் நோக்கி புறப்பட்டனர். துருக்கியின் மேற்கு மாகாணமான இஸ்மிர் அருகே சென்ற போது இந்த படகு திடீரென கடலில் மூழ்கியது. தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த துருக்கி கடற்படையினர் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 45 பேரை மீட்டனர். அவர்கள் உயிர்காக்கும் உடை (லைப் ஜாக்கெட்) அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். இந்த துயர சம்பவத்தில் 6 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. அவர்களது உடல்களை கடற்படையினர் மீட்டனர். மற்றவர்களின் கதி என்ன ஆனது என தெரியவில்லை.
படகில் அளவுக்கு அதிகமான ஆட்கள் இருந்ததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் இது போன்ற விபத்துகளில் 627 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச அகதிகளின் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நடந்த மற்றொரு விபத்தில் துருக்கியை சேர்ந்த 5 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் நினைவுகூரத்தக்கதாகும்.
Average Rating